Tamil books

Thursday 21 April 2011

தான் கலந்த தமிழ்

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தில் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் நாற்பத்தி-யரு நூல்களைச் சுவடிகளோடு ஒப்பிட்டுப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையினர் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளை மின் ஊடகத்திற்கு மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இச்செயல்பாடுகள் முழுமையடையவிருக்கின்ற இச்சூழலில் மூலபாட ஆய்வு குறித்த விவாதமும் மேற்கிளம்பியிருக்கிறது.

 பழந்தமிழ் நூல்களின் முதல் பதிப்புகள் தொடங்கி அது அடுத்தடுத்த காலகட்டத்தில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது/மாற்றமடைந்தது என்பதை அறிவதற்கான ஆவணங்கள் தொகுக்கப்பட்-டுள்ளன. எனவே முன்னெப்பொழுதையும் விட பாடவியல், தொழில்நுட்பம், சமூகவியல் ஆகிய பின்புலங்களில் பதிப்புச் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தொடக்க காலப் பதிப்பாசிரியர்களின் பதிப்பு நேர்மை என்பது பொது விவாதக் களத்திற்கு
வந்துள்ளது.

பதிப்பாசிரியர்கள் உருவாகி வந்த சமூக/ நிறுவனப் பின்புலங்கள், பதிப்பிக்க எடுத்துக்-கொண்ட நூல்களின் தன்மைகள், சரியான பாடங்களைத் தேர்வு செய்வதற்குப் பின்பற்றப்-பட்ட முறையியல்கள், பனுவலின் முன்னும் பின்னுமாக பதிப்பாசிரியர் தரும் குறிப்புகள், இணைப்புகள், பதிப்பாசிரியருக்கும் வெளியீட்டு நிறுவனங்களுக்குமான உறவுகள், ஆவணக்-காப்பகங்களுக்கும் பதிப்பாசிரியர்களுக்குமான உறவுகள், எந்த வாசகருக்காகப் பதிப்பிக்கப்பட்டன என்ற தகவல்கள், பதிப்பிக்கப்பட்ட நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள், பதிப்பாசிரியர்களுக்குச் சமூகம் அளித்த முக்கியத்துவம், பதிப்புகள் ஏற்படுத்திய சமூக விளைவுகள் ஆகியன பதிப்புத் தொடர்பான விவாதக் களத்தில் முதன்மை பெறுகின்றன. இதுவரை பெயர் மட்டுமே அறியப்பட்ட பலப்பல பதிப்பாசிரியர்களின் பதிப்புப் பணிகள் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் விளக்-கப்பட்டு வருகின்றன. ஒளிவட்டம் கட்டப்பட்ட சில பதிப்பாசிரியர்கள் பிரதியில் நிகழ்த்திய ஊடாட்டங்களின் நுண்அரசியல் முதன்மைப்-படுத்தப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் தமிழ்ப் பதிப்புச் செயல்பாட்டில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த உ. வே. சா. குறித்த சில விவாதங்களை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது.
பதிப்பாசிரியர்களுள் உ. வே. சா.வே தமிழின் மிக முக்கியமான நூல்களைப் பதிப்பித்தார் என்பதாலும் தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்-நூல்களைப் பதிப்பிக்கவே கழித்தார் என்பதாலும் தமிழின் தலைசிறந்த பதிப்பாசிரியராக அறியப்பட்டவர்.

தென்னிந்திய_தமிழ்ச் சமூக வரலாறு எழுதுதலில் இவர் பதிப்பித்த நூல்கள் பெரும் பங்கு வகித்தன. இந்திய மரபு என்பதே சமஸ்கிருத மரபாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சூழலில் அதற்கு மாற்றான இணையான_வலுவான திராவிட மரபு இயங்கியதை மொழியியல் அறிஞர்கள் நிறுவ, அதற்கான இலக்கியத் தரவாக இவர் பதிப்பித்த நூல்கள் முக்கிய-மாயின. நூல்களின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பதிப்பாசிரியர் முக்கியத்துவம் அடைகிறார்.

பதிப்பிக்க எடுத்துக்கொண்ட நூலுக்கான சுவடிகளைத் தேடித் தொகுத்தல், நூல் குறித்த புறத்தகவல்களைச் சேகரித்தல், பாட வேறுபாடு தருதல், பாடம் தொடர்பான ஏராளமான ஒப்பீட்டுக் குறிப்புகளைத் தருதல், நூலின் முன்னும் பின்னும் தரும் இணைப்புகள், திருத்தியும் விரிவாக்கியும் வரும் அடுத்தடுத்த பதிப்புகளில் காட்டும் தொடர்கவனம், பதிப்பாசி-ரியருக்கே இருக்க வேண்டிய நிதானம் ஆகியன உ. வே. சா.வின் கடின உழைப்புக்குச் சான்று சொல்லுகின்றன.

பதிப்பாசிரியராக, தமிழாசிரியராக, ஆய்வறி-ஞராக, உரையாசிரியராக, உரைநடையாளராக எனப் பல்துறை சார்ந்த செயல்-பாடுகளில் அழுத்தமான பங்களிப்பினைத் தமிழ்ச் சூழலுக்குத் தந்து தமிழால் நிறைவாழ்வு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா.

தமிழ்த்தாத்தா பற்றிய மதிப்பீடுகள் இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்-பட்டன. ஒன்று உ.வே.சா. வாழ்ந்த காலத்தி-லேயே கலைமகள், ஆனந்த விகடன், கல்கி முதலான பார்ப்பன இதழ்களால் புனித ஆளுமையாகக் கட்ட-மைக்கப்பட்டு இறப்பிற்குப் பிறகு பதிப்புக் கடவுளாக மாற்றப்பட்டு கி.வா.ஜ., கல்கி தொடங்கி இன்றைய முக்கியமான சில பதிப்பியல் ஆய்வாளர்கள் வரை அவரைத் ‘திருவுரு’-வாகவே அடையாளப்படுத்தும் புனித மதிப்பீடு.
இத்திருவுருவின்  மீது மிக லேசான விமர்ச-னம் வைத்தவர்கள் தமிழ்த்துரோகிகளாகவும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவுமே அடை-யாளப்படுத்தப்பட்டனர். தனிப்பட்ட முறையில் பேசும்பொழுது உ. வே. சா.வைக் கடுமையாக விமரிசிக்கும் சில அறிஞர்கள் கூட எழுதும்-போது கவனமாக ஊரோடு ஒத்தூதியே செல்லு-கின்றனர்.
எந்த விமரிசனமும் இன்றி உ. வே. சா.வை இவர்கள் ஏற்றுக்கொண்டது போலவே தமிழ்ச் சமூகம் முழுவதும் அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இவர்கள். இன்னொரு பக்கம் புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் சில பாடங்களைத் தன் விருப்பம்போல் திருத்தினார் என்றும் (அவர் பயன்படுத்திய சுவடியில் உள்ள பாடம் வேறாகவும் அவர் பதிப்பித்த நூலில் உள்ள பாடம் வேறாகவும் உள்ளதைச் செம்மொழி நிறுவன ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்-றனர்.) அது சமூகவியல் அடிப்படையில் பெரும் சிக்கலுக்கு உரியதாகவும் வரலாற்றுக்கான மூல ஆவணங்களைத் திரித்தல் எனும் நேர்மையற்ற செயலாகக் கருதப்பட்டு உ.வே.சா.வை முற்றாக நிராகரிக்கும் போக்கும் நிகழ்கிறது. இதை மேலும் உறுதிப்படுத்த சி.வை.தா.வை உ.வே.சா.வுடன் ஒப்பிட்டுப் பாடம்  காணுவதில் ஒரு தெளி-வான முறையியலையும் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட நூலினை வரலாற்றுத் தன்மையில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் தன்மை உ.வே.சா.வைக்  காட்டிலும் சி. வை. தா.விடமே மேலோங்கியிருப்பதாகக் கூறி உ. வே. சா. எனும் புனித பிம்பத்திற்கு மாற்றாக சி. வை. தா.வை நிறுவுகின்றனர். உண்மையில் சி. வை. தா. பதிப்பிலுள்ள பிரச்சனைகளை நாம் இன்னும் விவாதத்திற்கு உட்படுத்தவேயில்லை. தொல்-காப்பியப் பொருளதிகார பேராசிரிய-ருரையை நச்சினார்க்கினியர் உரையாகவே பதிப்பித்ததும், ஐவர் இயற்றிய கலித்தொகையை நல்லந்துவனார் இயற்றிய கலித்தொகையாகவே பதிப்பித்ததும் தொடக்ககாலப் பதிப்பாசிரியர்-களுக்கு இருந்த சிக்கல் என்று சாதாரணமாகப் புறந்தள்ளி விடமுடியாது. ஆங்கில வழிக் கல்வியும் ஆறுமுக நாவலரிடம் பெற்ற பயிற்சி-யும் அறிவார்ந்த நிலையில் சி. வை. தா.வைப் பதிப்புத்துறையில் இயக்கின. மரபான தமிழ்ப் புலமையைக் கொண்டு தொடர்ச்சியான பயிற்சி-யின் மூலமாக மட்டுமே பதிப்பு நுட்பங்களை உள்வாங்கியவர் உ. வே. சா.
ஆக உ.வே.சா.வை விமரிசனமின்றி ஒளிவட்டம் கட்டுவதையும் முற்றிலுமாக நிராகரிப்பதையும் விட்டு விமரிசனத்தோடு கூடிய ஆரோக்கியமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

1887இல் சீவக சிந்தாமணியை நச்சினார்க்-கினியர் உரையுடன் பதிப்பித்து வெளியிடும் பொழுது அப்பதிப்பு அக்காலத்தைய பதிப்பு நுட்பங்களை உள்வாங்காத பதிப்பாகவே அமைகிறது. 1862களிலேயே அடி பிரித்து சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் 1887இல் அடி பிரித்து சீர் பிரிக்காமல் பதிப்பிக்கப்பட்டுள்ளது இப்பதிப்பு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அடி பிரித்து சீர்பிரித்தல் என்பது நவீன பதிப்பு முறையின் ஓர் அம்சமாகும். இது புலமைத் தளத்திலிருந்து வெகுசனத் தளத்திற்கு நூலை எடுத்துச் செல்லும் வழிமுறையாகும். உரைநடையில் நிறுத்திப் படிப்பதற்குக் காற்-புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறியீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டனவோ அதேபோல் செய்யுள் பதிப்பில் வாசகர் படிப்பதற்கு எளிமை-யாக சீர் பிரித்துக் கொடுத்தல் என்பதும் அவசியம். அவ்வாறு இல்லாமல் பதிப்பிப்பதி-லுள்ள சிக்கல் அப்பதிப்பு யாரை நோக்கமாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இத்தகைய குறைபாடுகள் நீங்கிய பதிப்புகளை உ. வே.சா. வெளிக் கொணர்கிறார். குறிப்பாக 1889இல் வெளியிட்ட பத்துப்பாட்டு, 1892இல் வெளியிட்ட சிலப்பதிகாரம் ஆகியன பதிப்பு நுட்பங்களை உள்வாங்கிய சிறந்த பதிப்புகள் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இறுதிவரை பாடங்களைத் தேர்ந்தெடுப்-பதற்கான முதன்மைச் சுவடி எது என்பது குறித்தோ அதைத் தேர்ந்தெடுப்பது பற்றிய சரியான முறையியல் குறித்த தெளிவான பார்வையையோ உள்வாங்கவேயில்லை.
உ. வே. சா. பதிப்பித்த நூல்களில் மூலத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டி-லும் மூலத்தை விளக்குவதற்கு அவர் காட்டிய அக்கறையே மேலோங்கி நிற்கிறது. அதுதான் தமிழாசிரியர்களும் தமிழறிஞர்களும் விதந்து பேசக்  காரணங்களாயின. அவர் பதிப்பித்த நூல்கள் பெரும்பாலும் உரையுடன் கூடிய நூல்களாகவே இருந்தன. நச்சினார்க்கினியரின் உரைமரபு மிக வலுவான நிலையில் உ. வே. சா. விடம் தொழிற்பட்டுள்ளது. ஒரு சொல், தான் கூறுகின்ற பொருளில் எவ்வாறு பிற இலக்கியங்-களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுவர். உ.வே.சா. ஒவ்வொரு பாடலினடியிலும் தரும் ஏராள-மான குறிப்புகள் அந்த அடிப்படையில் புரிந்து கொள்ளத்தக்கதே. மொழியியல் ஆய்வாளன் சொல்லின் காலத்திற்கு முக்கியத்துவம் தருவான். உரையாசிரியர்கள் சொல்லுக்குக் கொடுக்கப்-படும் வரலாற்று முக்கியத்துவத்தைக் காட்டிலும் பயன்பாட்டுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் தான் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகத்தையும் குறுந்தொகையையும் ஒரே தன்மையில் வைத்து அணுக அவரால் முடிந்தது.
உ.வே.சா. பயன்படுத்துகின்ற சொற்கள் மீது மிகக் கவனமாக இருந்தார் எனக் கூற முடிய-வில்லை. பதிப்பியல் ஆய்வாளர்கள் மூல ஆவணங்-களை நேரடியாகப் பார்க்காமலேயே சில தவறான பதிவுகளை உருவாக்கிச் செல்லு-கின்றனர். பெருமாள் முருகன் எழுதிய ‘சிந்தா-மணியே கிடத்தியால்-’ என்ற கட்டுரையில் தரும் குறிப்பு அத்தகையதொன்று.
‘பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் கவனம் கொண்டவர் ஐயர். புறநானூற்-றைப் பழைய உரையுடன் அவர் பதிப்பித்தார். அவ்வுரையை எழுதியவர் யாரெனத் தெரிய-வில்லை. ஆகவே ‘புறநானூறு மூலமும் பழைய உரையும்’ என்று தலைப்பிட்டார். அவருக்குப் பின் உ. வே. சா. நூலகம் வெளியிட்ட பதிப்பு, அதனைப் பின்பற்றித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பதிப்பு ஆகியவற்றில் பழைய என்னும் சொல் நீக்கப்பட்டு ‘புறநானூறு மூல-மும் உரையும்’ என்று மட்டும் கொடுக்கப்பட்-டுள்ளது. உரை யாருடையது என்பதைத் தலைப்பிலிருந்து வாசகர் உணர்ந்துகொள்ள முடியாது. உ. வே. சா.வே உரை எழுதியுள்ளார் எனத் தவறாகப் புரிந்து கொள்ளவும் நேரும். ‘பழைய’ என்னும் சொல் அத்துணை முக்கியத்துவம் உடையது.’ (2007, 185_86)

இத்தகைய கூற்றினைப் பெருமாள் முருகன் கூறுவதற்கு அடிப்படைக் காரணம் புறநானூற்-றின் முதல் பதிப்பை அவர் காணவில்லை; காணாதது ஒரு பெருங்குறையுமில்லை; காணாததைக் கண்டது போல எழுதுவதுதான் பிரச்சினை. 1894இல் புறநானூற்றை உரையுடன் பதிப்பித்த உ. வே. சா. அதற்கு ‘புறநானூறு மூலமும் உரையும்’ என்றுதான் பெயர் வைத்தார். அதில் அவர் பதிப்பித்த உரை பெயரறியப்படாத ஆசிரியர் எழுதிய உரையாகும். 1903இல் ஐங்குறு-நூற்றை உரையுடன் பதிப்பித்தார். அதிலுள்ள உரையும் ஆசிரியர் பெயர் அறியப்படாத உரையேயாகும். ஆனால் அதற்கு ‘ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும்’ எனப் பெயர் வைத்தார். அதேபோன்று 1904இல் ‘பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்’ எனப் பதிப்பித்தார். 1894இல் பதிப்பித்த ‘புறநானூறு மூலமும் உரையும்’ மீண்டும் 1923இல் இரண்டாம் பதிப்பாக வரும்பொழுது ‘புறநானூறு மூலமும் பழைய உரையும்’ என்றானது. ஆசிரியர் பெயர் அறியப்படாத உரைகளைப் பழைய உரைகள் எனப் பதிப்பிப்பதற்கான காரணம் என்ன?
‘பழைய’ என்ற சொல் ‘புதிய’ என்ற சொல்-லின் எதிர்வு. இங்கு புதியவுரை என்ற ஒன்று இருந்தால் மட்டுமே பழைய உரை என்று ஒன்றைச் சுட்ட முடியும். சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் (1903 க்கு முன்புவரை) புதிய உரை என்று எதுவும் இல்லை. ஐங்குறுநூற்றைப் பதிப்பிக்கும் பொழுது அதற்கு புதிய உரை எழுதுகிறார் உ. வே. சா. ஆனால், அவ்வுரையைப் பதிப்பிக்கவில்லை. என்றாலும் தாம் எழுதிய உரை புதிய உரை என்றும் அதற்கு முன்புள்ள ஆசிரியர் பெயர் அறியப்படாத உரை பழைய உரை என்றும் அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. எனவே ‘ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும்’ எனப் பதிப்பிக்கின்றார்.
உரைகளைப் பொறுத்தவரை ‘பழைய’ என்ற அடை பொருளற்றது. இன்று சங்க இலக்கியங்-களுக்குப் பல்வேறு உரைகள் எழுந்த வண்ண-மிருக்கின்றன. ஒவ்வொரு புதிய உரை வரும்-பொழுதும் அதற்கு முந்திய உரைகள் பழைய உரைகளாக மாறுகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட உரைகள் எல்லாம் இன்று பழைய உரைகளாகி விட்டன. நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள உரைகள் புதிய உரைகளாக விளங்குகின்றன. வேறு உரை வரும்போது இவை பழைய உரை-யாக மாறும்.
ஒரு பதிப்பாசிரியரான உ.வே.சா. உரை-யாசிரியராக மாற நினைத்ததன் விளைவு ஆசிரியர் பெயரறியப்படாத உரை பழைய உரை என்றானது. அடுத்து வந்த காலங்களில் இவை திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவறான ஒரு சொற் பயன்பாட்டைக் கூட பெரிய விளக்கம் கூறி நியாயப்படுத்துகிறது இன்றைய பதிப்பு வரலாறு.
உ.வே.சா. பதிப்பித்ததைக் காட்டிலும் பதிப்பிக்காமல் விட்ட நூல்களை ஆய்வுக்குப் பயன்படுத்தும் போதுதான் உ. வே.சா. பதிப்பின் அருமை தெரிய வருகிறது. மூலபாடத்தைத் தவிர பிற அனைத்துக் குறிப்புகளுக்கும் ஒரு ஆய்வாளன் உ.வே.சா. பதிப்பையே நாடவேண்டி-யுள்ளது. இன்று வரையிலும் அகநானூற்றுக்கு அதன் உரைகளோடு கூடிய ஒரு சிறந்த பதிப்பு இல்லையென்றே கூறலாம். உ.வே.சா.வின் பத்துப்பாட்டுப் பதிப்பைப் பயன்படுத்திய ஒரு ஆய்வாளனுக்கு அகநானூற்றுப் பதிப்பு எத்தகைய மனநிலையை உருவாக்குகிறது என்று நோக்கினால் அகநானூற்றை உ.வே.சா. பதிப்-பிக்கவில்லையே என்ற வருத்தமே மேலோங்-குகிறது.
1904இலிலேயே ரா. ராகவையங்கார் அகநானூற்றைச் செந்தமிழில் பதிப்பிக்கும் முயற்சியைத் தொடங்குகிறார். உடல் நலக்-குறைவால் அவர் பரிசோதித்த சுவடிகள், கையெ-ழுத்துப் பிரதிகள் ஆகியன பாண்டித்துரைத் தேவரால் திரும்பப் பெறப்பட்டு உ.வே.சா.விடம் ஒப்படைக்கப்படுகின்றன. உ.வே.சா.வும் அக-நானூற்றைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கு-கின்றார்; ஆனால் வெளிவரவில்லை. சுவடி-களைத் திரும்பத் தரவும் இல்லை. 1918இல் ராஜகோபாலையங்கார் அவர்கள், மு. ராகவையங்-கார், ரா. ராகவையங்கார் ஆகியோரின் உதவி-யுடன் ‘களிற்றானை நிரை’யைப் பதிப்பித்து வெளி-யிடுகின்றனர். 1923இல் அகநானூறு முழுமையும் பதிப்பாகிறது;  ஆனால், அந்தப் பதிப்பும் சிறந்த பதிப்பு என்று கூறுவதற்கில்லை.
அகநானூற்றை உ.வே.சா. பதிப்பிக்கவில்லை என்பதைக் காட்டிலும் அப்பதிப்பு வராமலிருக்க அவர் காட்டிய அக்கறையே பெரும் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. உ.வே.சா.வின் இன்னொரு பக்கம் என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.
தாம் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட செவ்வியல் நூல்களின் சில சொற்களுக்கு பொருள்-காண நாட்டார் மரபை நாடிய உ.வே.சா. நாட்டார் இலக்கியங்களை ஏன் பதிப்பிக்க எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
பாடத்திட்டத்திலுள்ள இலக்கண நூல்-களைத் தவிர பிற இலக்கண நூல்களைப் பதிப்பிக்க கவனம் செலுத்தாதது குறித்தும் இவர் பதிப்பித்த நூல்கள் அவ்வக் காலகட்டத்தில் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக எங்ஙனம் மாறின என்பது குறித்தும் ஆராய வேண்டி-யுள்ளது. அதுபோல திராவிட இயக்கம் வலு-வான நிலையில் வளர்ச்சியடையக் காரணமாக இருந்தவை சங்க இலக்கியப் பதிப்புகள் என வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். திராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்த தமிழறி-ஞர்கள் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்ததற்-காகவே இன்று உ.வே.சா.வை விமர்சிக்கின்றனர். இதனுடைய வரலாற்றுத் தன்மை குறித்தும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment