Tamil books

Friday 14 March 2014

ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)

ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955) மனித வரலாற்றின் தலை சிறந்த மேதைகளில் முதன்மையானவர். அரிஸ்டாட்டில், கலீலியோ, நியூட்டன் வரிசையில் அடுத்து இடம் பெறும் பெரிய அறிவு ஜீவி ஐன்ஸ்டீன். 1905ல் சார்பு தத்துவம் முதல், ஒளியின் மின் விளைவு வரை இவர் வழங்கிய நான்கு ஆய்வுகள் இயற்பியலை மட்டுமல்ல உலக நடப்பையே மாற்றி அமைத்தன. இவர் அமைத்து வழங்கிய  E=mc2 சமன்பாடு இல்லையேல் இன்றைய மின் அணு சாதனம் ஏதும் இல்லை. இதே சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நடந்தபோது அதன் விளைவுகளை முன் வைத்து அறிவியலை அழிவுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக முதலில் களமிறங்கிய மாமனிதர் ஐன்ஸ்டீன், யூதராகப் பிறந்ததற்காக ஹிட்லரால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலுமாய் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஐன்ஸ்டீன் இன்றைய அறிவியல் மயமான நவீன உலகின் ஆக்கச் சிற்பிகளில் முதன்மையானவர் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.  ஐன்ஸ்டீன் எந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வாழ்ந்தாரோ, உலக அறிவியல் கண்டு பிடிப்புகளின் மைய நீரோட்டமும் அந்த நாடுகளை நோக்கி நகர்ந்தது. தலைசிறந்த மனிதநேய சிந்தனையாளரான ஐன்ஸ்டீன் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 26 முறை நேர் காணல்கள் செய்யப்பட்டார். அதைத் தவிர தன் கருத்துக்களை சுதந்திரமாகவும் திறந்த மனதுடனும் கட்டுரைகளாக, எழுத்துக்களாக, உரைகளாக கடிதங்களாகப் பகிர்ந்தார். அப்படியான அவரது உரையாடல்களிலிருந்து இன்றைய பொருத்தப்பாட்டோடு கூடியவற்றைத் தேர்வு செய்து இங்கு வழங்கப்படுகிறது. பதிலின் முடிவில் யாருக்கு எந்த ஆண்டு கூறிய பதில் என்பதை அடைப்புக் குறிக்குள் பார்க்கலாம்.
 நன்றி: விக்கிப்பீடியா.

ஒரு சராசரி கடவுள் நம்பிக்கைவாதி நீங்கள் இல்லை, என்பது தெரியும். ஆனால் உள்ளுணர்வு, ஆழ்மனம் என்றெல்லாம் நம்பிக்கை வைத்துள்ளீர்களே... இது முரணாக இல்லையா?

அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்ன? மனித உள்ளுணர்வு என்பதில் சந்தேகமே இல்லை. 1919 மே 29, ராயல் அகாடமியின் இரு குழுக்கள் எனது சார்பியல் சரியா என்பதை பரிசோதிக்க களம் இறங்கின. அந்த சூரிய கிரஹணத்தின் அனைத்து ஆய்வுகளின் போதும் எனது அனுமானங்கள்  (Hypotheses)  சரியென நிரூபிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்பினேன். எனது அனுமானம் எனது உள்ளுணர்வின் வெளிப்பாடு. அனைவரும் நம்பிக்கைகொண்டிருந்த ஒரு பாதைக்கு முற்றிலும் எதிராக எனது உள்ளுணர்வு ஒரு பாதையை முன்மொழிந்தது. அன்று அவர்கள் சார்பியலுக்கு தங்களது கணக்கீடுகள் ஒத்துப் போகவில்லை என்று சொல்லி இருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர்கள் என்பாதை சரி என்று நிருபித்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. கற்பனை வளமிக்க படைப்பாக்க சிந்தனை அறிவுப் பூர்வமான அணுகுமுறையை விட முக்கியம். உள்ளுணர்வு என்பது இயற்கையில் அமைந்த மனித இயல்புகளில் ஒன்று. எல்லாரும் பனியில் விறைத்து செத்துக் கொண்டிருந்தபோது கற்களால் தீப்பொறி வரவழைத்து  நெருப்பை படைத்தது அது தான் (விவேரஃக்\1929)

பயன்அறிவியல்  (Applied Science)  எனும் தனித்துறை உருவாகி வருகிறதே. அற்றி உங்கள் கருத்து என்ன?தைப் ப
பாட்டு 

வாழ்வை எளிதாக்கி மனித வேலைப்பளுவை குறைக்க, வீட்டு உபயோக கருவிகளாகவும், இயந்திர உற்பத்தியாகவும் இன்று அறிமுகமாகி இருக்கும் அறிவியல் இயற்பியல், வேதியியல் என அனைத்தின் கலவை. ஆனால் வாழ்வை எளிதாக்கிவிட்ட கருவி யுகம் நமக்கு மிக குறைவான மன மகிழ்ச்சியே தருகிறது. அறிவியல் தொழில் நுட்பம் யுத்தத்தின்போது நம் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்ளப் பயனாகிறது. அமைதி காலத்திலோ நம் வாழ்வை துரிதப்படுத்தி நிச்சயமற்ற தன்மையை அது வழங்குகிறது. மனித இனத்தின் அடிமை முறையை ஒரு வகையில் முடிவுக்கு கொண்டு வந்துள்ள இது முழு மனித இனத்தையும் இயந்திரவியலின் அடிமையாக்கிவிடும் அபாயம் கொண்டது. இயந்திர யுக மனிதன் நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொழில்நிலையத்தில் உற்பத்தி சக்திகளின் ஒருவனாய் ஒருநாள் முழுவதும் ஒரே மாதிரி வேலையில் ஈடுபட்டு பங்கீட்டின்போது மிகக் குறைவான மதிப்பீடை அடையும் துயரமாய் வெடிக்கும் அபாயம் இதற்கு உண்டு. மனித இனம் குறித்த அக்கறையும் அவனது பயன்பாடு குறித்த மனத்தெளிவும் மறந்த அறிவியல் ஆபத்தில் தான் போய் முடியும். விற்பனைக்காக சந்தைகளை நிரப்ப இருக்கும் கருவிகளில் நான் அறிவியலை மட்டும் பார்க்கவில்லை அதன் பின் ஒளிந்திருக்கும் கலாச்சார சரிவையும் சந்தைகளின் மாய வலையையும் சேர்த்தே காண்கிறேன். சாதாரண மனிதர்களின் தீர்க்க இயலாத கூலி - வேலை மற்றும் படைப்பாக்க பங்களிப்பின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமாக நான் அதை பார்க்கிறேன். உங்கள் அறிவியல் வரைபடங்கள் சமன்பாடுகள் நடுவே மனிதனை மறந்து விடாதீர்கள். மனித  முன்னேற்ற வரமாக அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். சாபமாக அல்ல. (நியூயார்க் டைம்ஸ்-1931)

E=mc2  சமன்பாட்டின் கணித நிரூபணம், சமீபத்திய அறிவியல் ஆய்வு அடிப்படையிலான நிரூபணம் எது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது?


ப: காக்ராஃட்(Cockcroft) மற்றும் வால்டன் (Walton) இருவருமாக ஆய்வடிப்படையில் நிறைக்கும் ஆற்றலுக்குமான சார்பை நிறுவி இருக்கிறார்கள். நிறையும் ஆற்றலும் பருபொருளின் அடிப்படையில் சொல்வதானால் ஒரே நாணயத்தின் இருமுகங்கள். இச்சமன்பாடு, இது நான் எனது 1905 ஆய்வுக் கட்டுரையில்  (Does the Inertia of a Body Depend upon its Energy Content) ஒரு வாசகமாக இடம் பெற வைத்திருந்ததன் சுருக்கம். ஒரு பொருள் L எனும் ஆற்றலை கதிர்வீச்சாக வழங்குமாயின் நிறை L/C2  எனும் விகிதத்தில் முற்றிலும் சுருக்கமுறும் என்பதிலிருந்து அது தொடங்கியது. m=L/c2 என முதலில் விரிவாக்கம் அடைந்த அதை கணித நிரூபணப் படி நிலையின்போது  E=mc2 என அடைய நேர்ந்தது. அறிவியல் ஆய்வு அந்த கருத்துரு (Hypothesis) அறிவியல் மெய்மையாக  (fact)  விரிவாக்கம் பெற்றுள்ளது. இந்தப் படிநிலைகளில் கணிதமா, அறிவியல் ஆய்வா எது எதனை விட அவசியம்  என்றெல்லாம்  நாம் புரிந்து கருதவாய்ப்பில்லை. இவை ஒன்றுக்குள் ஒன்று. (ஆண்டனோயா வாலண்டின் -1940)

சமீபத்தில் கோட்பாட்டு இயற்பியல் குறித்த உங்களது ஹெர்பெர் ஸ்பென்சர் உரையில் 'எளிமையாக புரிந்து கொள்வதற்கும் எளிமைப்படுத்திவிடுவதற்கும் வித்தியாசமுள்ளதாக' பேசி இருக்கிறீர்கள். இதை சற்று விளக்க முடியுமா?


சார்பு தத்துவத்தின் அடிப்படைகள்  வெளிவந்தபோது உலகெங்கும் அது புரியவில்லை எனும் கருத்தாக்கம் எழுந்தது. எவ்வளவோ சித்தாந்தங்கள் வெளிவந்த இந்த நூற்றாண்டின் இந்த கால கட்டம் சார்பியலை ஏற்றதற்கு அதை அவசியமான குவாண்டவியல் விஞ்ஞானிகள் புரிந்து விவாதித்ததே முக்கிய காரணம். இயற்பியல் அடிப்படைகள் மனித மனதின் படைப்பாக்கத்திலிருந்தே உருவாகின்றன. ஆனால் அக உலக சக்திகளின் வெளிப்பாடுபோல ஒரு வகை பாவனையோடு வேண்டுமென்றே கடினத்தன்மையை சிலர் வரிந்தேற்றுவதை நான் அறிவியல் என்று ஏற்கமாட்டேன். அதேசமயம் எல்லாமே புல் அறுக்கும் தொழிலாளி அளவுக்கு எளிதில் பிடிபடும்படி எளிமைப்படுத்தி விடுதல் நியாயமே இல்லாதது. கைக் கடிகாரத்தை ஒருவர் புரிந்து கொள்வது போன்றது அது. அவர் இரண்டு முட்கள் இருப்பதையும் அவை நகர்வதை வைத்து காலமறிதலையும் கற்கிறார். அவரால் 'கிளிக் கிளிக்' சத்தத்தையும் கேட்க முடிகிறது. ஆனால் வாட்சை திறந்து உள்ளே என்ன உள்ளது என்றும் அவர் அறிந்திருக்க அவசியமில்லை. ஆனால் அது குறித்து அவருக்கு கற்பனையில் ஒரு அமைப்பாக்கம் பிடிபடுகிறது. அவர் பார்த்த பொருட்களை கருவிகளை வைத்து அவருக்கு ஏற்பட்ட அனுமானம் அது. உண்மையான அமைப்பிலிருந்து அவர் மனங்கொண்ட கற்பனை அமைப்பு எவ்வகையில் ஒற்றுமை- வேற்றுமை கொண்டது என்பதை ஒப்பிட நீண்ட புரிதல் தேவை. கடிகார உட்கட்டமைப்பு பிடிபட அதன் தேவை, அவரது நிபுணத்துவம், அவர் யார் என பல படிநிலைகளில் நாம் கருத வேண்டியுள்ளது. கடிகார நிபுணத்துவமிக்க ஒருவரோடு ஒப்பிடும் அளவில் இவர் வேறுபட்டாலும் ஒவ்வொரு அறிவு நிலையாக விரிவடையும்போதுதான் உண்மை கருவியாக்கம் அவருக்குப் பிடிபடும். இத்தகைய அளவில் கோட்பாட்டு இயற்பியலை நாம் அணுக வேண்டும். கடிகாரத்தின் உட்கட்டமைப்பும் முழுமையாக அந்த கைக்கடிகார பயன்பாட்டாளருக்குப் புரியவேண்டும் என்றால் அது அவரது ஈடுபாடு பொறுத்த விஷயம். கடிகார உற்பத்தியாளர்கள் அவருக்குப் புரியும் வகையில் தான் அதன் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்வதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்காது என்றே நம்புகிறேன் (லியோப்போர்டு இன்ஃபீல்டு-1941)

இன்றைய உலகின் அவசியமான கல்வியறிவு எந்த புதிய துறையை வெகுஜனங்களுக்கு எடுத்துப் போகும்படி இருக்க வேண்டும். பள்ளி அளவில் நாம் சார்பியலை குழந்தைகளுக்குத் தரலாமா?


உலகை இருவித உலகாக வரலாற்றாளர்கள் பார்க்கிறார்கள். சிலர் நவீன நாகரீகம் வந்த பிறகு - அதற்கு முன் என பிரிக்கிறார்கள். சிலர் கிருஸ்த்துவிற்கு முன்- பின் என பிரிக்கிறார்கள். ஹாவர்டு பல்கலைக்கழகம் சார்பியலுக்கு முன் - பின் என வரலாற்றைப் பிரித்து சமீபத்தில் அறிவித்தது. ஆனால் ஹிரோஷிமா- நாகசாகி அணுகுண்டு வீச்சிற்கு பின் அணுஆயுதப் பெருக்கம், அணுக்கதிர் ஆபத்துகளுக்கு முன் அதன் பின் என உலக வரலாறு எதிர்காலத்தில் புரிந்து கொள்ளப்படும் நிலையே உண்மைநிலை எனப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல நாம் மக்களிடம் அணுக்கதிர் வீச்சின் அடிப்படைகள் குறித்தே இன்று கல்வியளிக்கும் அவசியத்தில் உள்ளோம்.  உலகம் இதுவரை பார்த்திராத பயங்கரமான பேரழிவுப் பாதையைத் தேர்வு செய்து விட்டதென்றே தோன்றுகிறது. புதிய வகை அணுகுமுறை தேவை, புதிய பாதையில் பேரழிவைத் தவிர்ப்பது எப்படி என்பதையே நாம் கல்வியின் அடிப்படையாக, நீரோட்டமாகக் கொள்ள வேண்டும். புவியின் கதிர்வீச்சு நிரந்தரமாக நமது வாழ்நிலத்தை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றப்போகிறது. புவியின் ஆதார இயற்கை நலங்களை மனிதர்களின் ஆதிக்க அரசியலும் பேராசை பொருளாதார அமைப்புகளும் பெரிய அளவில் அழிவுக்கு உட்படுத்தப் போவதைப்பார்க்க முடிகிறது. கல்வி இதற்கு எதிராக செயல்பட வேண்டும். புவியை காப்பது குறித்தே அனைத்து வகைப் பாடப் பொருளையும் கட்டமைக்க வேண்டியுள்ளது. தீர்வு அறிவியலிடம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது மனிதர்களின்  இதயத்தில் உள்ளது. (நியூயார்க் டைம்ஸ்-1946)

ரஷ்யாவில் நடப்பதை உலகின் அச்சுறுத்தலாகப் பார்க்கிறீர்களா?


போல்ஷ்விஸம் ஒரு முக்கியமான சோதனை. தனிமனிதர்களுக்கு மேலாக சமூகம். மனிதஇன சமூக-பரிணாமவியலின் உச்சமாய் கம்யூனிசமே இறுதி இலக்காகக் கூட கருதலாம். போல்ஷிவிய சோதனையை குறிப்பாக நாடுகள் பரிசீலித்து பரிசோதிக்கலாம். ஆனால் ஸ்டானின் மீதான சர்வாதிகார குற்றச்சாட்டுகளின் மறுபக்கத்தையும் நாம் அறிய வேண்டும். ஹிட்லர் மாதிரி ஒரு ஆதிக்க அதிகார வெறியை எதிரியாக முகங்கொள்ளும்போது நாம் வெளியிலிருந்து விமர்சிப்பது மிகவும் எளிது. ரஷ்யாவின் அறிவுஜீவிகள் கூட அதை ஊர்ஜிதம் செய்கிறார்கள். தற்போதைய உலக அமைதி நேசராக நாம் சோவியத்தைப் பார்க்கிறோம். ஆனால் தேசிய வாதம், ஒரு சமூகத்தின் பாரம்பரியம், தனிமனித பங்களிப்புகள் இனக்குழு அங்கீகாரம் இவையும் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இது ரஷ்யர்களுக்கும் தெரியாததல்ல. (எம்.கே.வைஸ் ஹர்ட்-1949)

ஐன்ஸ்டீன் அறிவு ஜீவி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பணம் பண்ணத் தெரியாதவர்! செல்வந்தராகும் அளவுக்குத் திறனில்லை என்று உங்கள் மீது ஒரு விமர்சனம் உள்ளதே?


அமெரிக்கர்களுக்கு செல்வந்தர் ஆவது ஒன்றே இலக்காக இருப்பது தெரிந்ததுதான். நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலுக்காக ஒரு போதும் ஊதியம் எதுவும் பெறவிரும்பவில்லை. எனது அறிவியல் நோக்கிய விருப்பும் ஈர்ப்பும் என் சுய ஆர்வம் சார்ந்தவை. இத்தனை டன் பருத்திக்கு இத்தனை டாலர் என விலை சொல்ல எனது பங்களிப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். ஒரு இசையை நோக்கி ஈர்க்கப்படும் ரசிகனாய், நான் அறிவியலைப் பின் தொடர்கிறேன். அறிவியலால் வரும் பணம், மதிப்பு, அது தரும் பதவி பட்டங்கள் பெயர் அடைமொழி எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. எதுவும் அதனினும் சிறந்ததாக இல்லவே இல்லை. எனது மகிழ்ச்சியாகவும் ஒரே மனநிறைவாகவும் இருக்கும் ஒன்றை செய்திட தொடர்ந்து என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நான் வேறு நோக்கங்களுக்கு என்னை திசை திருப்பிட யார் நிர்பந்தித்தாலும் பணியமாட்டேன். சுதந்திர படைப்பாக்க சிந்தனையை கற்பனைத் திறனை தொடர்ந்திட தேவையான அனைத்தும் என்னிடமே உள்ளது. உங்களிடமும் உள்ளது என்பதை மதித்தபடி என் ஈடுபாட்டை தொடர்ந்திட விரும்புகிறேன் (வைஸ்ஹார்ட், 1930)

இயற்பியலின் பன்முனைக் கோட்பாடுகளை இணைக்கும் யூனிஃபைடு ஃபீல்டு தியரி நோக்கிய உங்கள் பயணம் எந்த அளவிற்க உள்ளது?


அணுக்கருவியல், அணுவிற்கு உள்ளே இருக்கும் உட்கரு துகள்களின் அமைப்பை ஆராய்கிறது. குவாண்டவியல் சார்புதத்துவமான விண்வெளியின் பிரமாண்ட அமைப்புகளும் இணைத்து ஒருமித்த கோட்பாட்டை எட்டுவதற்கான வேலையிலேயே என் வாழ்வை முழுமையாக்கிட விரும்புகிறேன். அதற்கு மட்டுமே என் நேரத்தை, வேலைபோக மீதி நேரத்தை- கழிக்கிறேன். அவ்வகைக் கோட்பாடு சாத்தியமாகும்போது அறிவியல் மனித வாழ்வின் அடுத்த வளர்ச்சிப் படி நிலையை எட்டி இருக்கும். (ரேமாண்ட் ஸ்விங்-1950)

ஒரு இயற்பியலாளராக, விஞ்ஞானியாக ஆகாமல் போயிருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள்?


அறிவியல் மனிதனாக ஆகாமல் போயிருந்தால் நான் இசைக்கான மனிதனாக ஆகியிருப்பேன். இப்போதும் எனது வயலின் கருவியும் விசைப் படகும் எனக்கு என் அடையாளமாக நான் கருதும் ஈடுபாடான விஷயங்கள். நாட்டின் அதிபராகும்படி மட்டுமல்ல பல்கலைக்கழக வேந்தர் முதல், நகர மேயர் என பல பதவிகள். ஆனால் என் ஈடுபாடு அறிவியலும் என் ஆசிரியர் பணியும் தான். ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதைவிட தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது என்பது என் கருத்து.

சோஷலிஸம் ஏன்?  (Why Socialism?)


மனித இனவளர்ச்சி குறித்த இயலில் சோஷலிஸமே நிரந்தர அறிவியல் என்று எனக்குப்படுகிறது. மனிதர்களின் சமூக சிந்தனை என்பதன் பரிணாம வளர்ச்சி சோஷலிஸ சமுதாயத்தை நோக்கியே இட்டுச் செல்ல முடியும். உற்பத்தி- லாபம் இவை பற்றிய பொருளாதார நிபுணத்துவம் இல்லாத என்னைப் போன்ற ஒருவருக்கு இது குறித்து கருத்துகூற  உரிமை உள்ளதா என்றால், அது இன்னும் சிறப்பான தகுதியாக இருக்குமெனக் கருதுகிறேன். தற்போதைய முதலாளிய சமூகத்தின் பொருளாதார ஆதிக்கமும் மூலதன குவிப்பிற்காக நடக்கும் சுரண்டலுமே அனைத்து வகையிலும் பிரச்சனைகளின் தீய ஊற்றாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் உச்சத்தில், இருப்போருக்கும் இல்லாதோர்க்குமான இடைவெளியை சந்தைப் பொருளாதாரம் ஆழப்படுத்துவதால் சமூகத்தின்  அனைத்து தட்டு மனிதர்களுமே, அபாயகரமான போட்டி, பாதுகாப்பின்மை, சுரண்டல் மனப்பான்மை, ஏமாற்று என எதிலும் மன அமைதியற்று சிதைவதைக் கண்கூடாகக்  காணமுடிகிறது. இவ்வகை திட்டமிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு சோஷலிஸமல்ல. இதில் அதிகார அமைப்புகள் நிறுவனமாகி சந்தைகளை ஆக்கிரமிக்கின்றன. இன்றைய உலகில் மிகப் பெரிய சிக்கல் தனிமனிதனுக்கும் அவனை உருவாக்கிய சமூகத்திற்குமான பரஸ்பர முரண்கள் தீயசக்தியாக உருவெடுப்பதே ஆகும். மேற்கண்ட அனைத்து வகை சிக்கல்களுக்குமான ஒரே நிரந்தரத் தீர்வு சோஷலிஸ பொருளாதாரமென்றே நான் நம்புகிறேன். அத்தோடு நமது கல்வியில் சோஷலிஸத்தை ஒரு அங்கமாக இணைக்க வேண்டும். 
(மன்த்லி ரிவ்யூ-1949)

ஆத்திகவாதமா? நாத்திகவாதமா? உங்கள் நிலைப்பாடு என்ன?


நான் ஒரு அறிவியல்வாதி. ஒரு உதாரணம் சொல்கிறேன். X  எனும் மனிதர் கடுமையாக உழைப்பவர்; Y ஒரு நிறைந்த பக்திமான். Y ஐ ஆதரித்து X ஐவிட அதிர்ஷ்டம் கொட்டவைக்கும் ஒரு கடவுள் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்? குண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவின் பவுத்த ஆலயங்களின் சிதிலமடைந்த பகுதிகளுக்குப் போனபோது ஸ்பீனோசாவின் கடவுள் குறித்த நிலைப்பாடுகளை நான் பரிசீலிக்கத் தொடங்கினேன். ஆட்சியாளனின் முன்நோக்கிய திட்டம் - ஆதிக்க அரசியலின் சமரசம், இவர்களது கடவுள் யார் பக்கம் என்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. இன அடையாளமாய் லட்சக்கணக்கில் கொலையுண்டு தேசிய அடையாளமாய் பேரழிவுக்கு உட்படும் ஒரு மத அமைப்பைக் கடந்த சர்வதேச மனித நேயத்தை அறிவியல் சிந்தனை மட்டுமே விதைக்க முடியும். Be Scientific. (பால்.ஏ.ஸ்ஷில்ப் (1949).

thanks புதிய புத்தகம் பேசுது (2013 அக்டோபர்)

Saturday 1 March 2014

இஸ்லாம் உலகில் நடந்தது... – நடப்பது... – நடக்கவேண்டியது ...…


சு.பொ. அகத்தியலிங்கம்

--
இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண் டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன் . ” - என முன்னு ரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது .
“ நான் இஸ்லாம் குறித்தும் அதன் மூலம் அதன் வரலாறு , அதன் கலாச்சாரம் , அதன் செல்வங்கள், அதன் பிரிவுகள் குறித்து எழுத விரும்புகிறேன் . அது ஏன் சீர்திருத்தத்துக்கு உள்ளாகவில்லை ? அது ஏன் இவ்வளவு பேரச்சத்திற்கு ஆட்பட்டுள்ளது ? குரானை அர்த் தப்படுத்தல் மத அறிஞர்களின் அதிகாரமாக இருக்க வேண்டுமா ? இன்று இஸ்லாமிய அரசியல் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? இஸ்லாமிய உலகில் இந்தச் சூழல் மேலெழுவதற்கு இட்டுச்சென்ற நடைமுறைகள் யாவை ? இந்தப் போக்கை பின்னிழுக்கவோ மீறிச் செல்லவோ இயலுமா ? சில விஷயங்கள் இஸ்லாமிய உலகிற்குள்ளும் வெளியிலும் விவாதத்தை உருவாக்குமென்ற நம்பிக்கையில் ஆரா யப்பட்டுள்ளது. ” இவ்வாறு முன்னுரையில் மொழிந்திருப்பதற்கு இந் நூல் நியாயம் வழங்கி இருக்கிறது .
ஐந்து பாகங்கள் 26 அத்தியாயங்கள் 528 பக்கங்கள் என அளவில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் மிகவும் கனமான நூல் . இதைப் படித்துச் செரிப்பது அவ்வளவு சுலபமானதுமல்ல . இஸ்லாமின் தோற்றம் , அது எதிர்கொண்ட இடையூறுகள் , சிலுவைப்போர்கள், அதன் தத்துவப் பின்னணி,ஆட்சியதிகாரப்போட்டி என அனைத்த யும் முதல் நூறு பக்கங்களில் விமர்சனப் பூர்வமாக சுண்டக்காய்ச்சிய பாலாக நூலாசிரியர் தந்துள்ளார் . ஏற்கெனவே இவ்வரலாற்றுச் செய்தி களை பருந்துப்பார்வையாகவேனும் அறிந்து வைத்திருந்தால் மட் டுமே இப்பக்கங்களை கூர்மையாக உள்வாங்க இயலும். .
அதே சமயம் இந்த அடித்தளத்தைப் புரியாமல் இன்றைய இஸ்லாமிய உலகச் சிக் கல்களை புரிந்து கொள்வதும் சிரமம் .“ இஸ்ரேல் ,பாகிஸ்தான் இரண்டிலுமே அவற்றை உருவாக்கிய தந்தைகள் ஒப்புக்கொள்ளும் அரசியலிலிருந்து தொலைவிலிருந்த னர். கடவுட் கொள்கையில் அவ்வளவாக நம்பிக்கையற்றவராக அறி யப்பட்ட ஜின்னா தமது மதத்தில் பல தடைகளை மீறியவர் . இஸ்ரே லின் பென்குரியனும் மோசே டயானும் தம்மை நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். எனினும் இந்த இரு நாடுகளையும் உருவாக்கியதில் அடிப்படைவாதிகளின் விருப்பத்திற்கெதிராக மதம் மையமான இலக்காகிப் போனது . ஜமாத் - இ - இஸ்லாமியும் அதன் யூதப்பங்காளிகளும் இந்த நாடுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தனர் . ” - இந்த பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள் உள் ளீடாக இருந்த நுட்பமான முரண்பாடுகள் புரியும் . அதனை இந் நூலில் சில அத்தியாயங்களில் அலசி உரசிக் காட்டியுள்ளார் .
ஓட்டோமான் பேரரசு எனப்படும் துருக்கிப் பிராந்திய அரசின் நெடிய வரலாறும், துருக்கியில் கமாலும், எகிப்தில் நாசரும், இந் தோனேசியாவில் சுகர்னோவும், ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவும், இன்னும் சிலரும் வரலாற்றில் வகித்த முற்போக்குப் பாத்திரங்களும் இஸ்லாம் எப்போதுமே மதவெறிகொண்ட பயங்கரவாதிகளின் உலக மாக இருந்திடவில்லை என்பதை நினைவூட்டுகிறது .
இரண்டு உலகப்போர்கள் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்ப டித் தன்னை உலகப் போலீஸ்காரனாக சுயநியமனம் செய்துகொண்டது; பெட்ரோலுக்காக இஸ்லாமிய நாடுகளின் உள்விவகாரங்களில் எப்படிப் புகுந்து விளையாடியது ; ஜிகாத்தையும் ஆட்சியதிகாரத்தை யும் எப்படி பொம்மலாட்டம்போல் ஆட்டுவிக்கிறது ; கம்யூனிச எதிர்ப்பு என்கிற பனிப்போர் காலகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாட மதவுணர்வை எப்படி முடுக்கி விட் டது ; சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் - அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிந்தைய காலகட் டத்திலும் அமெரிக்கா போடும் பயங்கரவாத எதிர்ப்பு வேடம் எத்தகையது - அதன் தத்துவ அடிப்படை என்ன? இப்படி ஒரு பரந்த சித்திரத்தை இந்நூல் நமக்குக் காட்டுகிறது .
இங்கு இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம் மதத்தில் எதிர்ப்புகுரலே இல்லை ; இருந்தால் அழிக்கப்பட்டு விடும் என வரலாற்றை அறியா மல் உளறித்திரிகின்றனர் . “அன்வர் ஷேக் வழக்கு ” என்கிற 15 வது அத்தி யாயத்தை கண்டிப்பாக படிக்கவேண்டும் .கடந்த நூற்றாண்டில் மட்டுமே நஜீம் `ஹிக்மத் , பெயிஸ் அஹமது பெயிஸ் , அப்துல் ரகு மான் முனிஃப் , மகமுத் டார்விஷ் , ஃபாசில் இஸ்கந்தர் , நக்வி மக்போஸ், நிஸார் கப்பானி , பிரமோதய ஆனந்த டோயர் , ஜிப்ரில் டியோப் மம் பேடி, மற்றும் பலர் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இருந்துள்ளனர் ” என்கிறார் நூலாசிரியர் . இந்நூலாசிரியர் தாரிக் அலியே கூடதன்னை ஒர் நாத்திகர் என பெருமையோடும் அறிவுப்பூர்வமாகவும் பிரகடனப் படுத்திக் கொண்டவர். இடதுசாரிச் சிந்தனையாளர்.
இந்நூலை வரலாற்று நூலாக பொதுவில் வகைப்படுத்தலாம் ; எனினும் கூர்மையான தத்துவ விமர்சனமும் அரசியல் விமர்சனமும் ஊடும் பாவுமாய் இழையோடியுள்ளது . வரலாற்றைப் புரட்டிய பல கவிதைகள் , நாவல்கள் , சினிமாக்கள் என பல அரிய படைப்புகளை பொருத் தமான இடத்தில் கையாண்டு இந்நூலுக்கு உயிர்த்துடிப்பை வழங் கியுள்ளார் . இஸ்லாமிய உலகு குறித்த ஒரு அரிய நாவலெழுதும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தேடி சேகரித்த அறிவை இந்நூலில் தந்துள்ளார். இஸ்லாமிய உலகில் மார்க்சியம் உருவாக்கிய தாக்கங்களும் ; கம்யூனிஸ்டுகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளும் உரிய அங்கீகா ரம் பெற்றுள்ளதுடன் ; அதன் சரிவுகளும் தோல்விகளும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது .
மத அடிப்படைவாதம் ஒற்றை இரவில் ஒசாமா பின்லேடன் என்கிற ஒற்றை மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும்; அந்த ஒசாமா பின்லேடனே அமெரிக்க ஏகாதிபத்திய உருவாக்கமே என்பதையும்; தூண்டிவிடப்பட்ட ஜிகாத்தின் பின்னே ஏகாதிபத்திய நலனும் பெட்ரோல் எண்ணெய்க்கிணறுகளின் மீதான பேராசையுமே உள்ளதையும் இந்நூல் நிறுவுகிறது .
அதே சமயம் “ ஒரு இளம் முஸ்லிமுக்கு கடிதம் ” என்கிற 22 வது அத்தியாயம் விடுக்கும் செய்தி மிக முக்கியமானது; இந்நூலின் குவி மையம் அதுதான்; “மதவாதம் எழுச்சி பெற்றதற்கு ஒரு பகுதி காரணம் புதிய தாராளவாதத்தின் உலகளாவிய கட்சிக்கு வேறு மாற்றுக் கண்டுபிடிக்க முடியாததால்தான் . இங்கு இஸ்லாமிய அரசுகளும் தமது நாட்டை உலகமயம் ஊடுருவ அனுமதிக்கும் வரை சமூக அரசியல் அரங்கில் தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள அனு மதிக்கப்படும் என்பதை நீ காணலாம் . அமெரிக்கப் பேரரசு முன்பு இஸ்லாத்தை உபயோகித்தது . மீண்டும் அதைச் செய்ய முடியும். இங்குதான் சவால் இருக்கிறது.
அடிப்படைவாதிகளின் பைத் தியக்காரத்தனமான ஆசாரத்தன்மையையும் , பிற்போக்குத் தனத் தையும் அடித்துச் செல்லக்கூடிய ஒரு இஸ்லாமிய சீர்திருத்தம் தேவை. ஆனால் அதற்கும் மேலாக , இன்று இஸ்லாமிய உலகிற்கு மேற்கு அளிப்பதாகச் சொல்வதற்கும் மேலாக , முற்போக்கான புதிய யோசனைகளுக்கு இஸ்லாமிய உலகைத் திறந்துவிடுவது தேவை . இதற்கு ஆட்சியையும் மசூதியையும் உறுதியாகப் பிரிப்பது தேவைப்படும் ; மதகுருக்களை ஒழிப்பது தேவைப்படும்; இஸ் லாமியக் கலாச்சாரம் முழுமைக்கும் சொந்தமான புத்தகங்களை அர்த்தப்படுத்த முஸ்லிம் அறிவுஜீவிகள் தங்களுக்குள்ள உரி மையை நிலைநாட்டுதல் தேவைப்படுகிறது; சுதந்திரமாகவும், பகுத்தறிவுடனும் கற்பனை வளத்தோடும் சிந்திக்கிற உரிமை தேவைப்படுகிறது ; இந்த திசையில் நாம் செல்லாவிட்டால், நமது பழைய போர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் . புதிய மனிதாபி மானமிக்க செல்வம் மிக்க எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக நிகழ்காலத்திலிருந்து பழையகாலத்துக்கு எப்படிச் செல்வ தென சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் .
இது ஏற்க முடி யாத பார்வை ” இப்படி நூலாசிரியர் எச்சரிப்பதும் வேண்டுவதும் இந்நூலின் முத்தாய்ப்பாகும்.கடினமான இந்நூலை கடிது முயன்று மொழியாக்கம் செய்த கி. ரமேஷூக்கும் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் பாராட்டு களைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது . எனினும் இந்நூலின் கடினத்தன்மைக்கு மூலத்தின் அடர்த்திதாம் காரணமா , மொழி யாக்கமும் பங்கு வகிக்கிறதா என்பதை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வல்லுநர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். மெசபொடோமியா என்பது ஈராக்கை மையமாகக் கொண்டது; ஒட்டோமான் பேரரசு துருக்கியை மையமாகக் கொண்டது என்பன போன்ற பழைய வரலாற்றுச் செய்திகளை புரிய ஏதுவாக ஒரு அருஞ்சொல் விளக்கப் பட்டியலை முன்பகுதி யிலேயே தொகுத்து வழங்கி இருக்கலாம் .
அது போல நூலினை சரியாக புரிந்து கொள்ள ஏதுவாக தமிழ் - ஆங்கில சொற்களஞ்சி யம் ஒன்றை பின் இணைப்பாக வழங்கி இருக்கலாம் . அந்தந்த காலகட்ட உலக வரை படம் தேவை . மெசபொடோமிய காலம், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலம் , இன்றைய உலகம் எனப் பிரித்து இணைப்பாகத் தருவது அவசியம்.இப் போதுகூட இவற்றை அச்சிட்டு மீதமுள்ள நூலுக்கு இணைப்பா கத் தருவது மிகமிக அவசியம் . ஏனெனில் இந்நூல் இடதுசாரி ஊழியர்கள் அவசியம் படித்து உள்வாங்கவேண்டிய நூலாகும்.

அடிப்படை வாதங்களின் மோதல்சிலுவைப்போர் ,ஜிகாத் ,நவீனத்துவம்
ஆசிரியர் : தாரிக் அலி ,தமிழில் : கி.ரமேஷ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 7 , இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,சென்னை - 600 018.பக் : 528 , விலை : ரூ. 350 .

Friday 21 February 2014

மக்களின் கைகளில் மார்க்ஸ்!

நூல் அறிமுகம்

என்.குணசேகரன்

மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது. இந்த நூலை தமிழில் தோழர். கி.இலக்குவன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மூலதனம் மூன்று தொகுதிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2200 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய நூல். இந்த மூன்று தொகுதிகளிலும் இருக்கிற சில அடிப்படை கோட்பாடுகளையும் கருத்துக்களையும், 400 பக்க அளவில் இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. இந்த நூலை வாசிக்கிற போது மூன்று தொகுதிகளையும் மார்க்சின் விரிந்து பரந்துள்ள சிந்தனை ஓட்டத்தையும் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது.
மூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால்,ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.
நூலின் உள்ளடக்கத்தின் முதல் அத்தியாயமே மூலதனத்தின் மூன்றாவது தொகுதியிலிருந்து துவங்குகிறது. முதல் அத்தியாயத்தில் பண்டங்கள்விலைகள்இலாபங்கள் என்கிற தலைப்பில் சில அடிப்படைகள் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக முதலாளியின் உற்பத்தி செலவு கொண்டுள்ள மூன்று பிரிவுகளான, 1. உற்பத்தி சாதனங்கள், 2. நில வாடகை, 3.கூலி ஆகியனவற்றை விளக்கி இதற்குள்ள தொடர்புகள்முரண்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.
அதன் பிறகுசரக்கு சுற்றுமூலதன சுற்று அவற்றையொட்டி உருவாகிற இலாபம் போன்ற விசயங்கள் எல்லாம் விளக்கப்படுகிறது. சரக்கின் உள்ளே புதைந்துள்ள பயன் மதிப்புபரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றிற்குரிய தொடர்புகள் விளக்கப்படுகிறது. பிறகுபொருட்களின் மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வி எளிமையாக விளக்கப்படுகிறது. இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படுவதுதான் உற்பத்தி நிகழ்வு. அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் மனித உழைப்பு உறைந்து கிடக்கிறது. பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பது,அதில் சமூக ரீதியில் அவசியான உழைப்பு நேரம் என்பதை ஏற்கனவே மார்க்ஸ் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.
முதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்பு சக்தியும் ஒரு சரக்காகவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாளி கூலி என்கிற விலையைக் கொடுத்து உழைப்பு சக்தியை வாங்குகிறார். இது உற்பத்தி நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த பேரம் முடிவடைந்து உழைப்பாளி தனது உழைப்பை செலுத்த முனைகின்றார்.
உழைப்பு சக்தியை வாங்குதல்-விற்றல் என்ற அத்தியாயத்தில் உற்பத்தி நிகழ்வின் போது புதிய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஜூலியன் போர்ச்சார்ட் விளக்குகிறார். இந்த அத்தியாயம் முதலாளிக்கு கிடைக்கிற இலாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவாகிறது என்கிற கட்டுக்கதையை உடைத்தெறிகிறது. உற்பத்தி நிகழ்வின் போது தொழிலாளி செலுத்துகிற உழைப்பு சக்திதான் ஏற்கனவே இருக்கிற மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்டவற்றில் செயலாற்றி புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி நிகழ்வின்போது ஏற்படும் உபரி மதிப்புதான் முதலாளிக்கு இலாபமாக கிடைக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தியில் இரு துருவங்களாக இயங்குவது முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும். மூலதனம்,கச்சாப் பொருட்கள்இடுபொருட்கள்உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கக் கூடிய பணம்உற்பத்தி சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடைமையாகக் கொண்டது முதலாளி வர்க்கம். ஆனால்தொழிலாளி வர்க்கத்திற்கு இதுபோன்ற எந்த உடைமையும் இல்லை. அவர் தன்னிடம் உள்ள திறமையால் இயக்குகிற உற்பத்திக் கருவிகளும் அவருக்கு உடைமை இல்லை. அவருக்கு இருக்கிற ஒரே உடைமை அவரிடம் இருக்கிற உழைப்புச் சக்தி. இதைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிற போது அவர் சுதந்திரமானவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய உழைப்பு சக்தியை விற்பதற்கு அவர் தயார் நிலையில் இருக்கக் கூடியவர். இந்த உழைப்பு சக்தியை சந்தையில் விலை கொடுத்து பொருள் வாங்குவது போலகூடியவரை குறைந்த விலையில் வாங்கிட முதலாளி முயற்சிக்கிறார்.
உற்பத்திக் கருவிகள்மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்ட முதலாளியின் மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் எனப் பெயரிடுகிறார். ஏனென்றால் இதில் எதுவும் புதிய மதிப்பை உருவாக்குவதில்லை. உற்பத்திப் பொருள் உருவாவது உழைப்பாளி தனது உழைப்பு சக்தியை செலுத்தி மதிப்பை ஏற்படுத்துகிற போதுதான் உற்பத்திப் பொருள் சந்தை விற்பனைக்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகிறது. அதாவது பரிவர்த்தனை மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருள் உழைப்பாளியின் உழைப்பு சக்தியால் படைக்கப்படுகிறது. இந்தப் பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு முதலாளி ஏற்கனவே வைத்திருக்கிற மாறா மூலதனத்தில் கூடுதல் மதிப்பு ஏற்றப்படுகிறது. உதாரணமாக முதலாளியின் மாறா மூலதன மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் சந்தையில் பொருள் விற்பனைக்குப் பிறகு பத்து கோடி லாபம் சேர்க்கப்பட்டு ஆயிரத்து பத்து கோடி முதலாளிக்கு கிடைக்கிறது. தனது ஏனைய செலவுகள் போக அந்த லாபத்தில் கணிசமான பகுதியை ஏற்கனவே உள்ள மூலதன மதிப்போடு முதலாளி சேர்த்து விடுகிறார். இவ்வாறு உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பாளியின் உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற புதிய மதிப்பு உபரி மதிப்பு எனவும் அந்த உபரி மதிப்பு இலாபமாக முதலாளிக்கு சென்று சேர்கிறது என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். இந்த லாபம் மேலும் மேலும் மூலதனம் பெருகவும்மூலதனக் குவியலுக்கும் வித்திடுகிறது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்புக்களை ஜூலியன் போர்ச்சார்ட் கோர்வையாக எடுத்துரைத்து விளக்குகிறார்.
இதில் உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிற கூலி ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதாவதுஉற்பத்தி நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற உபரி மதிப்பு பற்றி அப்போது பேரத்தில் பேசப்படுவதில்லை.
இதனை விளக்குகிற போது மார்க்ஸ் உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலவிடப்படுகிற உழைப்பு நேரத்தை இரு வகையாகப் பிரிக்கின்றார். ஒன்று அவசியான உழைப்பு நேரம்மற்றொன்று உபரியான உழைப்பு நேரம். இந்த இரண்டும் சேர்ந்தாக உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலுத்தப்படுகிறது. முதலாளி அளிக்கும் கூலித் தொகை அவசியான உழைப்பு நேரத்திற்கு மட்டுமே. உபரியான உழைப்பு நேரம் முதலாளிக்கு இலவசமாக கிடைக்கிறது. அறிவியல்பூர்வமாக முதலாளித்துவ அமைப்பினுடைய இந்த விதிகளை மூலதனத்தில் மார்க்ஸ் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் சாராம்சத்தை ஜூலியன் போர்ச்சார்ட் அன்றைய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்குகிறார்.
உபரி மதிப்பு என்பது மூலதனக்குவியலுக்கான உயிர்நாடி. எனவேஇலாப வேட்டை நடத்த எப்போதுமே முதலாளி துடித்துக் கொண்டிருப்பார். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் துவக்க காலத்திலிருந்து தொழில்துறை உருவாகியுள்ள இக்காலம் வரை இந்த இலாப வேட்டைக்கான மூலதனத்தைக் குவிக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. மூலதனக் குவியலுக்கு உபரி மதிப்பை அதிகரிக்க வேண்டும். இது நேரடி உபரி மதிப்பை அதிகரிப்பது,சார்பு உபரி மதிப்பை அதிகரிப்பது என்ற வழிகளில் நடைபெறுகிறது. இதை போர்ச்சார்ட் விளக்குகிறார்.
வேலை நாள் 10 மணி நேரத்துக்கு நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உழைப்புச் சக்தியின் மதிப்பை இட்டு நிரப்புவதற்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறது என்றால்எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் ஒரு திட்டமான அளவில் உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேலை நாளின் கால அளவை 11 மணி நேரத்துக்கு நீட்டிக்க முடியுமானால்அல்லது உழைப்பின் உற்பத்திப் பொருளை 10 மணி நேரத்துக்குள் அதிகரிக்க முடியுமானால்அல்லது இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளையும் இணைத்துக் கொள்ள முடியுமானால் உபரி மதிப்பு அதே விகிதாசாரப்படி அதிகரிக்கும். இதன் மூலம் உபரி மதிப்பு அறுதி அதிகரிப்பைப் பெற முடியும்.
பட்டறைத் தொழில் துவக்க காலத்தில் இலாபத்தை அதிகரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகள் நூலில் பத்தாவது அத்தியாயத்திலிருந்து விளக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினர் முன்பு தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற தலைப்பில் ஒரு விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது. அதில் உபரி மதிப்பை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கூலியை மேலும் மேலும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். கூலியை குறைப்பது இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இதற்கு ஆண் தொழிலாளிகளை குறைத்து பெண்கள்குழந்தைகளின் உழைப்பைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். பிடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்கிற நூலில் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுகிற குரூரங்களை விளக்கியிருக்கிறார். பல சட்டங்கள் மக்களின் நிர்பந்தத்தால் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சுரண்டல் நீடித்தது.
வேலை நாளின் நீட்டிப்பு என்கிற அத்தியாயத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களது இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் செய்த கொடூரங்களை அவர் விளக்குகிறார். எடுத்துக்காட்டாகதீக்குச்சியில் பாஸ்பரசை பொருத்துகின்ற வேலையில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள்அரைப் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் விதவைகள் ஆகியோரை ஈடுபடுத்தினர். இரவு நேரப் பணிமுறையற்ற உணவு நேரங்கள்பாஸ்பரசின் நெடியினால் சூழப்பட்டுள்ள அறைகளில் சாப்பாட்டை உட்கொள்வது போன்ற படுபயங்கரமான சூழலில் அவர்கள் சுரண்டப்பட்டனர்.
நீராவி வண்டி இயங்கத் துவங்கிய காலத்தில் அது முதலாளிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்தது. உற்பத்திப் பொருட்களை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக நேரம் நீராவி எந்திரம் இயங்க வேண்டும். 1866 இல் ஒரு பெரும் விபத்து நேரிட்டு ஒரு கார்டுஒரு எஞ்சின் ஓட்டுநர்ஒரு சிக்னல் ஊழியர் ஆகிய மூன்று ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதில் வந்த முக்கியமான ஒரு உண்மை வெளிவந்தது. தண்டிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைவெளியின்றி 40 அல்லது 50 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதும்கண்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதும் நிகழ்ந்து அவர்கள் செயலிழந்த நிலையில் விபத்துக்கள் அதிகரித்தது. இவ்வாறு ஏராளமான வழிமுறைகளில் தொழிலாளிகளின் உழைப்பு சூறையாடப்பட்டது. ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களில் இடைவேளை இன்றி 26 மணி நேரம், 30 மணி நேரம் பெண்கள் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன.
எனவேமூலதனக் குவியலுக்கு வேலை நாள் நீட்டிப்பு ஒரு முக்கியமான வழிமுறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கட்டத்தில் கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் நடந்தன. அதனால்முதலாளித்துவம் இந்த வழிமுறையை குறைத்துக் கொண்டு வேறு ஒரு வழியை கையாளத் துவங்கியது. இது உழைப்பை மும்முரமாக்குதல் என்கிற அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. வேலை நேரத்தை நீட்டிக்காமல் சில சமயம் குறைத்தும் வேலை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் இயந்திரங்களை மேம்படுத்துவதுஇயந்திரங்களின் வேகத்தை அதிகமாக்குவது போன்ற பல நடவடிக்கைகள் மூலமாக உழைப்பு நேரத்தை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் இங்கிலாந்தில் எந்த அளவிற்கு முதலாளிக்கு உற்பத்தியை பெருக்கி இலாபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை பல விளக்கங்களோடு ஜூலியன் விளக்குகிறார்.
ஆனால்இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய வேறு சில விளைவுகளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதீத வேகம் காரணமாக தொழிலாளிகள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக துணி ஆலைகளில் சக்கரங்களும்உருளைகளும்ஊடுநூல் ஓட்டங்களும் விரைவாக செலுத்தப்படுகிற போது உழைப்பாளியின் விரல்கள் முன்னிலும் துரிதமாக திறமையுடனும் இயங்க வேண்டும். தயக்கமோகவனக்குறைவோ இருந்தால் விரல்கள் பலியாகிற சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினால்தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு ஆளாகிற நிலை ஏற்பட்டது.
எனவேமுதலாளித்துவ இலாப வேட்டை உழைப்பு நேர குறைப்பு இருந்த போதும்அதற்கு மாறாக வேலை நேரத்தை குறைத்து உழைப்பின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துகிற போதும் அதிக ஆபத்துக்கும் அவதிக்கும் ஆளானது உழைப்பாளி மக்களே. இந்த முதலாளித்துவ கொடூரச் சுரண்டல் இன்று வரை நீடிப்பதைக் காண்கின்றோம்.
முதலாளித்து வளர்ச்சியின் வரலாறே பெருவாரியான உழைப்பாளி மக்கள் சுரண்டலிலும்கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் மரணத்திலும் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தங்களது நூலிலும் தொகுத்துள்ளனர்: அந்த அடிப்படையில் போர்ச்சார்ட்டும் தனது நூலில் விளக்கியுள்ளார். இதனைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் பெரும்பகுதி மக்களின் மரண ஓலத்திலும்கொலைக்ளத்தலும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ முறை இன்னமும் நீடிக்க வேண்டுமா என்கிற ஆவேசத்தை நிச்சயமாக ஏற்படுத்திடும்.
வேலைநேரம் அதிகப்படுத்துவது அதன் பிறகு இயந்திர மேம்பாடு என்ற இந்த தொடர்ச்சியின் அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றுகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றி பெரும் முன்னேற்றங்களை சாதிக்கிறது. அதேநேரத்தில் இதுவும் இரண்டு விளைவுகளை ஏக காலத்தில் ஏற்படுத்துகிறது.
இப்போது முதலாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகள் தேவையில்லை. மாறும் மூலதனம் என்று மார்க்சினால் அழைக்கப்பட்ட உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிறது தொகையை இப்போது முதலாளி மிச்சப்படுத்துகிறார். தொழிலாளிகளின் தொழில்நுட்ப ரீதியான திறன் மேம்பட்ட நிலையில் அவரால் அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் மீதான மதிப்பினை உயர்த்த முடிகிறது. உபரி மதிப்பின் அளவு கூடுகிறது. இன்றைய நிலையில் பிரமாண்டமான சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சிக்கு அறிவியல்-தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உபரி மதிப்பு அதிகரித்ததன் விளைவே ஆகும். இந்த நிகழ்வுப் போக்கு இயக்கவியல் ரீதியாக மார்க்சின் மூலதனத்திலும் மக்களின் மார்க்ஸ் நூலிலும் விளக்கப்படுகிறது. இத்துடன் ஒட்டிய நிகழ்வாக பெருமளவு உழைப்பாளிகள் வேலையிலிருந்து விரட்டப்படுகிற நிலை உருவாகிறது. தயார் நிலையில் உள்ள வேலையில்லா ராணுவப் பட்டாளம் என்கிற சொற்றொடரை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இந்தப் பட்டாளம் சமூகத்தில் இருப்பது ஏற்கனவே வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து அவர்களுக்கு ஊதியத்தைக் குறைக்கவும் அதிகமாக உழைப்பைச் சுரண்டியும் முதலாளிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆகஇந்த நவீன யுகத்திலும் முதலாளித்துவத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவான பிறகும் பெருவாரியான உழைப்பாளி மக்கள் நிம்மதியற்ற வாழ்கையை தொடர வேண்டிய நிலையுள்ளது. இன்றைய அறிவியல்-தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சரியாக பயன்படுத்தப்பட்டால் மனித குலம் அனைத்திற்கும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திட உதவிடும். ஆனால் இது தனியொரு கூட்டத்திற்குமுதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும் ராஜபாட்டையில் நடைபோடுவதில்லை. தொடர்ச்சியான நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்கிறது. ஜூலியன் போர்ச்சார்ட் தற்கால வணிக நடவடிக்கைவணிக மூலதன வளர்ச்சி,வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை விரிவாக விளக்கிய பிறகு முதலாளித்து பாதை எதிர்நோக்கும் நெருக்கடிகளை தனியொரு அத்தியாயத்தில் விளக்குகிறார். உண்மையில் நுகர்வுத் தேவைகளுக்கும் பரிவர்த்தனைத் தேவைகளுக்கான முரண்பாட்டில் நெருக்கடி உருவாகிறது. ஒருபுறம் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ற உற்பத்தி திட்டமிடப்படாமல் மக்கள் வறுமையாலும் வாழ்வாதாரங்கள் இழந்தும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அதீத உற்பத்தி நிகழ்ந்து பொருட்கள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டு உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கிற நிலைமை ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் இந்த அராஜகத்தோடு வேறு சில நிகழ்வுகளும் சேர்ந்துவிடுகிறது. முதலாளிகள் தங்களுடைய உபரி மதிப்பை அதிகரிப்பதற்காக எடுக்கிற முயற்சிகள் எவ்வாறு வீழ்ச்சியடையும் இலாப விகிதம் என்கிற சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிற விளக்கத்தை போர்ச்சார்ட் கடைசிப் பக்கங்களில் விளக்கியுள்ளார். இன்று 2008-க்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அன்று மார்க்ஸ் விளக்கிய நெருக்கடி பற்றிய கோட்பாடுகள் சரியானது என்பதை நிரூபித்துள்ளன.
இதைப்போன்று முதலாளித்துவம் தொடர் நெருக்கடிகளால் ஆளாவதும் அதன் எதிர் விளைவுகளாக உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மீது தொடர் தாக்குதல் நீடிப்பதும் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மனித சமூகம் தற்போது சிக்கியிருக்கிற இந்த முதலாளித்துவ வலைப்பின்னல் மனித சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. முதலாளித்துவ இலாப வேட்டை சுற்றுச் சூழலையையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் மனித சமூகம் வந்திருக்கிறது. ஏற்கனவேமார்க்ஸ் கூறிய அடிப்படையில் இந்த முற்றுப்புள்ளி வைக்கிற படலத்தின் கதாநாயனாக தொழிலாளி வர்க்கம் விளங்குகிறது. தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகிற வர்க்கம்.
ஆனால்கோடானுகோடி உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டல் முறை குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த விழிப்புணர்வு உருவாக்கும் பணிக்கு சிறந்த கருவியாக ஜூலியன் போர்ச்சார்ட்டின் மக்களின் மார்க்ஸ் விளங்குகிறது.
மூலதனத்தின் மூன்று தொகுதிகள்: சுருக்கமான மக்கள் மதிப்பு:
            வெளியீடு: பாரதி புத்தகாலயம்                  ஜூலியன் போர்ச்சார்ட்
            பக்கங்கள்: 400                                              தமிழில்: கி.இலக்குவன்
            விலை: ரூ.250/-