Tamil books

Thursday 21 April 2011

எளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்

இரா. வெங்கடேசன்


சில நிகழ்வுகளை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. சில நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்கவும் செய்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கக்கூடியன. இருபதாம் நூற்றாண்டு புதிய மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கான வழியைப் பத்தொன்-பதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளே அமைத்துத் தந்துள்ளன. தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்ற சிந்தனையின் விளைவு உலகம் முழுமைக்குமான, புதிய மாற்றத்திற்குத் தேவையான பல நிகழ்வுகள் அந்நூற்றாண்டில் நடந்துள்ளன. அதில் முக்கிய நிகழ்வாக அச்சு ஊடக வருகையைச் சொல்ல வேண்டி உள்ளது. குவிந்து கிடந்த சிந்தனைமரபு வெகுசன மக்களைச் சென்றடையும்படியான போக்குகள் அச்சு ஊடக வருகையினாலேயே நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக உலகம் முழுமைக்குமான பெரும் சிந்தனை மாற்றத்திற்கு அச்சு ஊடகம் காரணமாக இருந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்-தில் தமிழ்ச்சூழலிலும் புதிய மாற்றங்கள் உருவாகும்படியான பல நிகழ்வுகள் பத்தொன்-பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று பழந்தமிழ் இலக்கண இலக்கியப் பிரதிகள் அச்சில் பதிப்பிக்கப்பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் புதிய ஆராய்ச்சிப் போக்கிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் பெரும் துணை புரிந்துள்ளன. பழந்தமிழ்ப் பிரதிகளைப் பதிப்பித்ததன் வழி தமிழின் தனித்துவத்தைத் தேடிச் செல்லும்படியான ஆய்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்வழி தமிழின் அடையாளங்கள் மீளக் கண்டெடுக்-கக்-கூடிய ஆய்வுகளும் நடந்தன. இவ்வாறான பல புதிய ஆய்வுப்போக்கிற்குப் பெருந்துணையாக இருந்தது பதிப்புத்துறையாகும். இப்பதிப்புத்துறை தமிழ்ச்சூழலில் பலராலும் கண்டுகொள்ளப்-படாமல் உள்ளது. இது தமிழின் மிகப்பெரிய சோகம். இவ்வாறான தமிழ் அச்சுப் பதிப்புப் பின்புலத்தை அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்தோடு பதிவு செய்ய வேண்டிய தேவை-யுள்ளது. அதன் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் வகையில் தமிழ்ப்பதிப்பு வரலாற்றுப் போக்கில் தனித்த இடத்தைப் பெற்ற மர்ரே அண்ட் கம்பெனியின் பதிப்பு முயற்சியின் முக்கியத்-துவத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
தமிழ்ப் பதிப்புப் போக்குகள்
மர்ரே நிறுவனத்தின் பதிப்பு முயற்சியைப் பார்க்கும் முன் தமிழ்ப் பதிப்புப் போக்கு, பார்க்க வேண்டிய ஒன்றாகும். தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் இருவகையான போக்குகளைக் காண முடியும். ஒன்று தனிநபர் சார்ந்த போக்கு, மற்றொன்று நிறுவனம் சார்ந்த போக்கு. தொடக்க காலத்தில் தனிநபர்களே பல அரிய நூல்களைப் பதிப்பித்-திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாகச் சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுச்சேரி நயனப்ப முதலியார், முத்துசாமிப் பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம். இவர்களின் பதிப்பு முயற்சியைத் தனிநபர் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். சென்னைக் கல்விச் சங்கம் (1820) பவானந்தர் கழகம் (1916) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1920) முதலானவற்றின் பதிப்பு முயற்சியை நிறுவனம் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். இந்த இருவகையான பதிப்புப்போக்கில் நிறுவனம் சார்ந்ததாக மர்ரே அண்ட் கம்பெனி-யின் பதிப்பு முயற்சியைப் பார்க்க வேண்டி-யுள்ளது.
மர்ரே சாக்கை ராஜம்
திருத்துறைப்பூண்டிக்கு ஆறு கல் தொலைவிலுள்ள துளசாபுரம் என வழங்கும் சாக்கை என்னும் ஊரில் கோபாலையங்கார்_ கோமளத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக 22_11_1904இல் பிறந்தவர் எஸ். ராஜம். இளமையிலிருந்தே நன்கு கற்றுத்தேறி வந்து நி.ஞி.கி. என்ற கணக்குத் தணிக்கைக்குரிய படிப்பில் ராஜம் வெற்றி பெற்றுள்ளார்1. இந்தப் படிப்பே பின்னாளில் அவரை மர்ரே நிறுவனத்-தில் பணிக்குச் சேரும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. மேலும் சட்டத்துறை-யிலும் நன்கு பயிற்சியுள்ளவராக ராஜம் விளங்கியுள்ளார்.
சென்னையில் ‘மர்ரே கம்பெனி’ (விuக்ஷீக்ஷீணீஹ் ணீஸீபீ சிஷீனீஜீணீஸீஹ்) என்னும் பெயரில் ஆங்கிலேய ஏல நிறுவனம் ஒன்று நன்கு செயல்பட்டு வந்துள்-ளது. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறியபோது மர்ரே நிறுவனத்தாரும் வெளியேறினர். அந்நிலையில் நிறுவனத்தில் உதவியாளர் பணியில் இருந்த எஸ். ராஜம்,
வி. சீனிவாசய்யங்கார் அறிவுரைப்படி மர்ரே நிறுவனத்தைத் தாமே ஏற்று தமையனார் வேதாந்தம் அய்யங்காருடன் ‘மர்ரே நிறுவனம்’ என்ற பெயரிலேயே அந்த ஏலத் தொழிலைச் சிறப்புற நடத்தி வந்துள்ளார்2. பின்னாளில் நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் ராஜமே ஏற்றுள்ளார். பின்னாளில் மர்ரே ராஜம் என்று அவர் ஏற்று நடத்திய நிறுவனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டார்.
முதுமையில் மர்ரே நிறுவனத்தைத் தம் தமையனாரின் மருமகனிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து பெற்றுவந்த பணத்தையும் பொதுநலன் கருதிச் சில அறக்கட்டளைகள் நிறுவி, அவ்வறங்கள் தொடர்ந்து பலன் அளித்தற்குச் செலவிட்டுள்ளார்3. கோயில்களுக்-கும் நன்கொடைகள் பல வழங்கி வந்துள்ளார். இவ்வாறு அறச்செயல்கள் செய்து வந்த ராஜத்திற்கு 1940களில் பெ.நா. அப்புசாமி அய்யர் மூலமாகப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்-பிள்ளையின் தொடர்பு கிடைத்துள்ளது. அப்பொழுது பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சந்திப்பே பின்னாளில் சந்தி பிரித்த பதிப்புகள் வெளி-வருவதற்குக் காரணமாக இருந்துள்ளது. கோவில்களுக்கு அறச்செயல்கள் செய்தல் போல எளியவர்களும் வாங்கிப் படிக்கும்படியான நூல்களை அச்சிட்டு வழங்குதலும் அறக்-கொடையே என வையாபுரிப்பிள்ளை, ராஜத்திடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தமிழார்வத்துடன் இருந்த ராஜம் உடனே இதற்கு இசைவுமளித்துள்ளார். நூல் பதிப்பிக்கும் பொறுப்பை வையாபுரிப்-பிள்ளை ஏற்றுக்கொண்-டுள்ளார். இதன் பின்னர் திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தை 1955இல் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளார். எஸ். வையாபுரிப்பிள்ளை இதற்குப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். இந்நூல் மர்ரே நிறுவனத்தின் முதல் வெளியீ-டாகும். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பா-லேயே நூல்கள் வெளியிடும் திட்டத்திற்குப் பொருளுதவி  செய்யும்படியான சிந்தனை ராஜத்திற்கு ஏற்பட்டுள்ளது. 1955_க்குப் பிறகு ‘தமிழிலக்கியச் செல்வம்’ என்னும் தொடரில் பல தமிழிலக்கியங்களை அவர் வெளியிட்-டுள்ளார். திவ்யப் பிரபந்த முதலாயிரத்தைத் தொடர்ந்து ஏனைய திவ்யப் பிரபந்தப் பாடல்களும் திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்-கணக்கு, வில்லிபாரதம் ஆகியன வெளியிடப்-பட்டுள்ளன.
பேரிலக்கியங்கள் மட்டுமின்றி சில சிற்றிலக்கியங்களையும் சாசன மாலை என்னும் கல்வெட்டு குறித்தான நூலொன்றையும் ‘சந்திக் குறியீட்டு விளக்கம்’ என்னும் அரிய கையேடு ஒன்றினையும் ராஜம் வெளியிட்டுள்ளார்-. வையாபுரிப்பிள்ளைக்குப் பிறகு ஒரு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு இவ்வெளி-யீட்டுப் பணியை அவர் செய்துள்ளார்.
1960இல் இலக்கிய வெளியீட்டிற்காக ‘சாந்தி சாதனா-’ என்ற அறக்கட்டளையையும், ஏழை மக்கள் இறுதிக்கடனுக்கு உதவ வகைசெய்யும் வகையில் ‘கிரியா சாதனா’ என்ற அறக்கட்டளை-யையும் குழந்தைகள் படிப்பிற்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் ‘சேவா சாதனா’ என ஓர் அறக்கட்டளையையும் ராஜம் ஏற்படுத்தியுள்ளார். சில சிறு நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்ய நன்கு செயற்படும் நிலையிலிருந்தும் பணத்தட்டுப்பாடு காரணமாக நலிந்துவிடக் கூடாது என்று கருதி அவை-களுக்கு நன்கு செயற்படும்படி ஊக்கமளித்து உதவ ‘பெசந்து ராசன்’ (றி. & ஸி. ஜிக்ஷீust) என்ற அறக்கட்டளையையும் அவர் நிறுவியுள்ளார். மேலும் தினம் தம் இல்லத்தில் இறைமணம் கமழும் வகையில் திருமால் வழிபாடு தொடர்ந்து நடைபெற ஓர் அறக்கட்டளையையும் ராஜம் நிறுவியுள்ளார்4. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் அறச்செயல் செய்வதையே பெரும் தொண்டாகக் கருதி வாழ்ந்து வந்த சாக்கை ராஜம் 13.03.1986 இல் காலமானார்.
மர்ரே அண்ட் கம்பெனி வெளியீடுகள்
திவ்யப் பிரபந்தம் தென்னாட்டில் நமது வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்-படும் சிறந்த  பக்தி நூல். இதன் கவிதைச் சுவை-யும் அழகும் நுகர்ந்து நுகர்ந்து இன்புறத்தக்கன. தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடை-மையாக இது கொள்ளுதற்குரிய பெருந்தகுதி வாய்ந்தது. பக்திப் பாடல் என்ற நூல் வகையில் இதனைப் போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிக மிகச் சிலவற்றைத்தான் கருதுதல் கூடும். இங்ஙனமிருந்தும் நமது தமிழ்ப் பொதுமக்களில் பலர் இதனைக் கல்லாதிருப்பது பெருங்குறையாகும். வைணவர்கள் மட்டுமே-யன்றித் தமிழ்ப் பொதுமக்களும் இந்நூலைக் கற்றுணர்ந்து பயன்பெறுதல் வேண்டும். இதுவே இப்பதிப்பின் தலைமையான நோக்கம்5 என்ற கருத்தை முன்னிறுத்தியே ‘திவ்யப்பிரபந்தம் _ முதலாயிரம்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கமும் விருப்பமுமே பிற்பட்ட அனைத்துப் பதிப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது. எஸ்.ராஜம், நெ.5, தம்புச்செட்டித் தெரு, சென்னை _ 01 என்ற முகவரியிலிருந்து-தான் அனைத்து வெளியீடுகளும் வெளியிடப்-பட்டுள்ளன. சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக் கொண்டு, ஓரளவு கற்றவரும் எளிதில் பொருள்-புரிந்து கொள்ளுமாறு சொற்களைச் சந்தி பிரித்தும் நிறுத்தற்குறிகள் இட்டும் நூல்களைப் பதிப்பித்திருப்பது இந்நிறுவனப் பதிப்புகளின் சிறப்பம்சமாகும். சமகாலத்தில் மற்ற பதிப்பு நிறுவனங்கள் புராண, இதிகாச நூல்களையும் சங்கப்பாடல்களையும் ரூபாய் 50, 100 என்று விற்றுவந்த நேரத்தில் மிகக் குறைந்த (ஒரு ரூபாய்) விலையில் நூல்களை அச்சிட்டு வழங்கி, எளிய மக்களும் வாங்கி, படிக்கும்படியான ஒரு சூழலை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. முதலாயிரத்தைத் தொடர்ந்து பிரபந்தத்தின் ஏனைய பகுதிகளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், சிற்றிலக்கி-யங்கள் என 1955இல் இருந்து 1960 வரை நாற்பது நூல்களை எளிய சந்தியமைப்பிலும் மலிவு விலையிலும் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்-ளது. மேலும் நாற்பது நூல்கள் சந்தி பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளன. (இவைகளின் பட்டியல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன)
தமிழில் சந்தி பிரிப்பு
மர்ரே நிறுவனத்தின் சந்தி பிரித்த பதிப்புகளைப் புரிந்துகொள்ள, தமிழில் நூல்களை அச்சிடுவதில் ஏற்பட்டு வந்துள்ள சிறுசிறு மாற்றங்களைப் பார்க்க வேண்டியுள்-ளது. பதிப்புக்கலை வளர வளர நூல்களை வெளியிடும் முறையிலும் மாற்றம் நேர்ந்தது. அவற்றுள் ஒன்று சந்தி பிரித்துப் பதிப்பித்தலாகும். பொருள் விளக்கத்திற்காகச் சொற்களைப் பிரித்துப் பதிப்பித்தனர்6. தொடக்க காலத்தில் நூல்கள் சுவடிகளில் உள்ளது போன்றே நிறுத்தற்குறி இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அடிகளைப் பிரித்தும், சீர்களைப் பிரித்தும், பதிப்பிக்கும்படியான படிநிலை மாற்றங்கள் தமிழ்ப்பதிப்பில் ஏற்பட்டுள்ளன. மேலைத்தேய சிந்தனைப் போக்கின் வெளிப்பாடுகளுள் ஒன்றான உரைநடை வளர்ச்சி, பரவலாக அனைத்து மக்களிடத்தும் இலக்கியங்கள் சென்றுசேர வேண்டும் என்ற கருத்தோட்டம் ஆகியன சந்தி பிரித்துப் பதிப்பிக்கும்படியான தேவையை உருவாக்கியுள்ளது. சந்தி பிரித்துப் பதிப்பிக்கும் சிந்தனை நெடுநாட்களாகவே தமிழ்ச்சூழலில் இருந்து வந்துள்ளது. சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவராக இருந்த வேங்கடாசல முதலியார் 1843இல் கம்பராமாயண அயோத்தி காண்டப் பதிப்புநூலின் விளம்பரத்தில்,
“இந்த ஸ்ரீமத் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 60ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்த திருவிருத்தத்திலும், அடிதோறும் உள்ள சொற்கள் எல்லாத்தையும், எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப்படுத்தாமலும், அடி தொடை நோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும், சிலதுகளை மாத்திரம் எழுத்துச்-சந்தி பண்ணியும் விகாரப்படுத்தியும், மற்றது-களை எல்லாம் சந்தி பிரித்தும், அச்சிற் பதிப்பித்து இருக்கிறோம். அப்படி எதுக்-காக செய்யப்பட்டது என்றால், இதற்கு முன்னமே லோகோபகாரம் ஆக, எம்மால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்ற சில சுவடிகளைப் பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்துப் பிரபுக்களும், வித்துவான்களும், புலவர்களும், கவிராயன்-மார்களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள், அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்-தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம்; ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேண்டும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்’’ என்று சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்கிறார். பெரும்பாலும் சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனை சமய இலக்கியப் பதிப்பாசிரியர்களிடத்து மிகுதியாக இருந்துள்-ளது எனலாம். சாதாரண மக்களிடத்தும் சமயக்கருத்துகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாக அவற்றைக் கருதலாம். அதேவேளையில் ஆங்கில மொழியின் வருகை குறித்தான பின்புலத்திலும் சந்தி பிரிப்புத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 1895இல் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் பதிப்பித்த ‘சுவர்க்க நீக்கம்’ மொழிபெயர்ப்பு முகவுரையில்,
‘தமிழறிந்தோர் ஆங்கிலேய பாஷையில் பழகுமுன் எழுதப்பட்ட நமது வசனநூலில், ஒரு வசனத்தின் முடிவையும் அடுத்த வசனத்தின் துவக்கத்தையும் காட்ட வசனங்களுக்கிடையே முடிப்பிசைக்குறி(திuறீறீstஷீஜீ)யிட்டும் இடம்விட்டும் எழுதலாவது,  ஒரு வசனத்தினுள்ளேயே வாசிப்-போன் நிறுத்தி வாசிக்க வேண்டிய இடங்களில் உறுப்பிசைக்குறி (சிஷீனீனீணீ) முதலிய குறியிட்டு இடம் விடுதலாவது இல்லை. அந்தக் குறை இப்போது இங்கிலீஷ் பாஷையரின் வழக்கத்தை அநுசரித்து வேண்டுமிடத்து இடம் விடுதலாலும் பல குறியீட்டினாலும் நிரப்பப்பட்டு விட்டது’. அவ்வாறு செய்யுள் எழுதும் முறை சீர்திருத்தப்-படவில்லை. இப்போது அச்சிடப்பட்டுள்ள சில நூல்களில் செய்யுள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்-பட்டிருக்கின்றன என்று கூறுவதன் வழி, ஆங்கிலமொழி பின்புலத்திலேயே முடிப்பிசைக்குறி, உறுப்பிசைக்குறி, சந்தி பிரிப்பு முதலான முறைகள் தமிழில் கைக்கொள்ளப்-பட்டுள்ளன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்விரு கருத்துகளும் சந்தி பிரித்து வெளியிடுதலின் தேவையை உணர்த்துகிறது. இத்தேவையின் ஒட்டுமொத்த வடிவமாக மர்ரே நிறுவனத்தாரின் பதிப்புகளைக் கொள்ளலாம். 1955இல் பதிப்புப் பணியைத் தொடங்கி 1960வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளது. அவ்வாறு சந்தி பிரித்து அச்சிடும் முறைக்கு பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளையே வித்திட்-டுள்ளார். ராஜம் வெளியிட்ட முதல் நூலுக்குப் பதிப்பாசிரியராக இருந்து தொடங்கி வைத்த பணி பின்னாளில் பல நூல்கள் வெளிவரு-வதற்குக் காரணமாக இருந்துள்ளது. சந்தி பிரித்து அச்சிடும் முறை குறித்தான சிந்தனை தொடக்கம் முதலே வையாபுரிப்பிள்ளையிடத்து இருந்து வந்துள்ளது; 1944இல் தாம் பதிப்பித்து வெளியிட்ட ‘நான்மணிக்கடிகை’ முன்னுரையில் அவர் கீழ்வருமாறு குறிப்பிடுவதன் வழி அதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
‘இந்நூலினைப் பதிப்பிடுதலில் ஒரு சில நியமங்களைக் கையாண்டுள்ளேன். இவற்றைக் குறித்துச் சில ஆண்டுகளாக நாம் கருத்தூன்றி ஆலோசனை செய்ததுண்டு. புது நியமங்களுக்கு அவசியம் உண்டா? என்ற ஐயப்பாடும் இடையிடையே தோன்றியது. ஆங்கிலத்தில் ‘சாஸர்’ இயற்றிய கவிகளைத் தற்காலத்துள்ளார் பொருளுணர்ந்து கொள்வதற்கு அருமையா-யிருத்தல் பற்றி, சொல்லின் எழுத்தமைதியை (ஷிஜீமீறீறீவீஸீரீ) மாற்றி அச்சியற்றல் தகுமா? இது போன்றதுதானே செய்யுளில் சொற்களைப் பிரித்து அச்சிடுதல்? இங்ஙனம் பிரிப்பதால் செய்யுளின் ஓசை கெட்டு விடுமல்லவா? இவை போன்ற கேள்விகளுக்கு முற்றும் திருப்திகரமான விடையளிப்பது எளிதல்ல. ஆனால், பொருள் எளிதில் விளங்கும்படி அச்சியற்ற வேண்டும் என்ற நோக்கும் கைக்கொள்ள வேண்டுவதா-யுள்ளது. இருவகை மனப்பாங்கிற்கும் ஒரு சமரசம் ஏற்பட வேண்டியது அவசியம். இந்நெறியில் நான் சிறிது முயற்சி செய்திருக்கிறேன். அனுபவம் பெருகப் பெருக இந்நியமங்கள் திருந்தியமைய-லாம். செய்யுள் பயிலுவோரின் தொகை அதிகரித்துவரும் இந்நாளில் இந்நியமங்கள் தக்கபடி ஆராயப்பட்டு அனைவர்க்கும் உடன்பாடான சில நியமங்கள் ஏற்படக்கூடும். அக்காலம் விரைவில் வரின் நலமாகும். வையாபுரிப் பிள்ளையிடம் இருந்த இவ்வாறான சிந்தனையே மர்ரே ராஜத்திடம் சந்தி பிரித்து வெளியிடும்படியான திட்டத்தை முன்வைப்ப-தற்குக் காரணமாக இருந்தது எனலாம்’.
மர்ரே பதிப்புகளின் தன்மை
மூல பாடத்தை மட்டும் எளிய சந்தியமைப்-பில் அமைத்துத் தந்திருப்பது மர்ரே பதிப்புகளின் சிறப்புத் தன்மையாகும். ஒரு செம்மையான நெறிமுறைகளை வகுத்துக்கொண்டே சந்தியைப் பிரித்துள்ளனர். எதைப் பிரிப்பது, எதைப் பிரிக்கக் கூடாது என்ற தெளிவான வரைமுறை-களை அவர்கள் பின்பற்றியுள்ளனர். சந்தி பிரித்தல் குறித்த 140 பக்க அளவிலான ‘சந்தி குறியீட்டு விளக்கம்’ என்ற நூலை 1960 இல் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தம் நிறுவனம் வெளியிட்ட பதிப்புகளில் கையாளப்-பட்ட சந்தி பிரிப்பு விவரங்களைக்கொண்ட நூல் அது. அதில் ‘சந்தி பிரித்தலில் சில நியதிகள்’ என்ற பகுதியில் தம் நிறுவனப் பதிப்புகளில் பின்பற்றப்பட்ட 32 நியதிகளை அந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
உதாரணமாக, சந்தி பிரிக்காத இடங்களாக:
1.    மரபுவழிப்பட்ட அடைமொழிகள் _ கொடுங்குழை, வாண்முகம்
2.    ஒருசொல் நீர்மைத்தாக அமைந்த சொற்கள் _ வேளாண்மை, மேற்பட
3.    வேற்றுமையுருபுகள், சாரியை, சொல்லுருபுகள், சேர்ந்துவரும் பெயர்கள் _ படியை, மடியகத்து.
போன்ற சந்திவிதிகளை அந்நூல் வரையறுத்-துள்ளது. மேலும் பொருள் விளக்கத்திற்காக வேண்டிய இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, உணர்ச்சிக்குறி முதலான நிறுத்தற் குறியீடுகளை இப்பதிப்புகளில் கையாண்டுள்ளனர். எந்தப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்ற தகவலைச் சுட்டிக்காட்டுகின்ற பதிப்பு நேர்மை இந்நிறுவனப் பதிப்புகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, 1957இல் வெளியிடப்பட்ட சிலப்பதிகார முகவுரையில் ‘உ.வே.சாமிநாதையர் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்பை உருவாக்கு-கிறோம்’ என்ற செய்தியைப் பதிவு செய்கின்றனர். இன்றைய பதிப்பாசிரியர் பலரிடத்து இந்த நேர்மையைக் காண முடிவதில்லை.
ஒவ்வொரு பதிப்பும் முகவுரை, நூற்பகுதி, சிறப்புப்பெயர்கள், பாடற்முதற் குறிப்பகராதி என்ற அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாட ரூப பேதங்கள், அரும்பத விளக்கம், உரைவிளக்கம், முதற்குறிப்பு அகராதிகள் அமைத்தலும், ஒரு பிரதி குறித்தான பிற தகவல்களைத் தருதல் எனப் பல சிறந்த பதிப்பு நெறிமுறைகளை மர்ரே பதிப்புகளில் காண முடிகிறது. உதாரணமாகத் திவ்வியப் பிரபந்தப் பதிப்புகளில் அப்பிரதி குறித்தான கதைக் குறிப்புகளைத் தந்திருப்பதைச் சுட்டலாம்.
பதிப்புக்குழு
ஆங்கிலப் பதிப்புத்துறையில் பதிப்பாசிரியர் குழு ஒன்று இருப்பதைப் போல மர்ரே நிறுவனப் பதிப்புப் பணியிலும் ஒரு சிறந்த பதிப்புக்குழு இருந்துள்ளது. அன்றைய நிலையில் பெரும் தமிழறிஞர்களாக இருந்த பெரும்பாலானோர் மர்ரே பதிப்புக் குழுவில் இருந்துள்ளனர். எஸ். வையாபுரிப்பிள்ளை, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.-ஸ்ரீ. ஆச்சார்யா, பெ.நா. அப்புசாமி அய்யர், கி.வா. ஜகந்நாதன், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன், ந. கந்தசாமிப்பிள்ளை, பு.ரா. புருஷோத்தமன், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, கம்பர் அடிப்பொடி சா. கணேசன், வே. வேங்கட-ராஜூலு ரெட்டியார், நீ. கந்தசாமிப்பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை முதலான தமிழறிஞர்கள் ராஜம் பதிப்பின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்தவர்-களாவர்.
பதிப்பு குறித்தான சமகால மதிப்பீடு
பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் பாடப்பகுதியாக இருந்த பாடல்களை மட்டும் அச்சிட்டுப் பொருளீட்டி வந்த அன்றைய பதிப்பாளர்களுக்கிடையே ராஜம் நிறுவனத்-தாரின் பதிப்புகள் அவ்வாறான எந்த தேவைசார் பின்புலமும் இல்லாது  வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் எளிய சந்தியமைப்பிலும், மலிவு விலையிலுமாக அமைந்திருந்த இப்பதிப்புகள் குறித்து எவ்விதமான கண்ணோட்டம் அதன் சமகாலத்தில் இருந்தது என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. மாற்று வடிவிலான பதிப்பை மக்கள் எவ்வாறு அணுகினர் என்பது அப்பதிப்பு குறித்தான மதிப்பீட்டை நமக்குப் புலப்படுத்தும்.
“தமிழ் இலக்கியங்கள் அவ்வளவுமே சாமான்ய மக்களிடத்துச் செல்ல வேண்டுமென்ற எனது புரட்சிகரமான கொள்கைக்கு மர்ரே அண்டு கம்பெனியார்தான் வெற்றி தந்தனர். மலிவுப்பதிப்பாக வெளிவந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொன்றிலும் ஆயிரம் பிரதிகள் விற்பனை-யானதாக அறிந்தேன். இந்தப் பதிப்புகள் இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசை-யரங்குகளில் பாட உதவி புரிந்தன. அதற்கு முன்பு இந்தப் பாடல்களை இசையரங்குகளில் பாடும் வழக்கம் இருந்ததில்லை’’7 என்று மர்ரே பதிப்பு குறித்தான தனது மதிப்பீட்டை ம.பொ.சி. பதிவு செய்கிறார். மேலும்,
“மர்ரே அண்டு கம்பெனியார் சிலப்பதிகாரம் _ மணிமேகலைப் பதிப்புகளை வெளியிட்ட விழாவில் பேசிய பெரும் புலவர் ஒருவர் ‘இந்த மாதிரி சந்தி பிரித்து வெளியிடும் பதிப்புகளைப் பார்க்கவே என் மனம் சங்கடப்படுகிறது’ என்றார். அவரது கருத்தை மறுத்து நான் பேசியபோது, ‘இரண்டாயிரமாண்டுகளாக என் போன்ற சாமான்யர்களை சந்தியில் நிறுத்திச் சங்கடப்-படுத்தியது போதாதா? சந்தி பிரித்து வெளியிட்-டால்தானே சங்கதி புரிகிறது’ என்று கூறினேன். அவையில் பெருத்த கைதட்டல், ஆரவாரம் எழுந்தது. இதனால் சந்தி பிரித்து வெளியிடு-வதை மக்கள் வரவேற்கிறார்கள் என்பது மேடையிலிருந்த புலவர்களுக்குப் புரிந்தது’’8 என்ற ம.பொ.சி.யின் கருத்தின் மூலம் சந்தி பிரித்த பதிப்பை மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.
ஆயினும் சில தமிழறிஞர்களுக்கு மர்ரே பதிப்பு குறித்த உடன்பாடற்ற கருத்துகள் இருந்துள்ளன. ம.பொ.சி. கூறும் செய்தியிலிருந்-தும் அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 1957இல் மர்ரே நிறுவனத்தாரின் சிலப்பதிகாரப் பதிப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு அடுத்த ஆண்டு வெளிவந்த (1958 இல்) ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேலை’ இரண்டு காப்பியங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பித்த ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்ற நூலின் முகவுரையில் வ. சுப. மாணிக்கம் “முற்றும் புணர்ச்சி பிரியாத வலிந்த பதிப்புகள் இன்று தமிழர்க்குக் கைத்துணையாகா. எல்லாப் புணர்ச்சிகளையும் அலக்கலக்காகப் பிரித்த மெலிந்த பதிப்புகள் தமிழியல்புக்கு எந்நாளும் பொருந்தா. இற்றைத் தமிழர் அறிவு பெறவும் நாளைத் தமிழ் ஆக்கம் பெறவும், ஊடலும் கூடலும் போல, செவ்வி நோக்கிப் பிரிதலும் புணர்தலும் பெற்ற அளவுப் பதிப்புகள்_நடுத்தரப்பதிப்புகள்_தமிழகத்திற்கு வேண்டுவன, இந்நோக்கத்தால் எழுந்த பதிப்பு இரட்டைக் காப்பியம்9 என்னும் கருத்தும் கருதத்தக்கது. ஆயினும் மர்ரே பதிப்புகள் மக்க-ளிடத்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்-துள்ளன’’.
இறுதியாக
மாற்றுச் சிந்தனையுடனான, அதே நேரத்தில் அறிவியல் அணுகுமுறையிலான ஆய்வுமுறையின் மூலமாகத் தமிழாய்வை மேற்கொண்டவர் பேரா. எஸ்.வையாபுரிப் பிள்ளை. பல்வேறு மரபுகளைத் தமிழில் உருவாக்கியவர். மர்ரே பதிப்புகளும் இவரின் சிந்தனையில் உருவானதேயாகும். 1955இல் முதலாயிரத்திற்குத் தாம் பதிப்பாசிரிய-ராக இருந்து தொடங்கிவைத்த மரபு 1960 வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருவ-தற்குக் காரணமாக இருந்தது. வையாபுரிப்-பிள்ளைக்குப் பிறகு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு ஆறு ஆண்டுகளில் நாற்பதிற்-கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு புதிய மரபை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனம் ஆசிரியர் குழுவால் சந்தி பிரித்து உருவாக்கப்பட்டுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இன்னும் வெளியிடாமலும் உள்ளது. இவற்றை விரைவில் வெளியிடுவதாகக் கூறியுள்ளனர்.
1960 வரை நூல்களை வெளியிட்டுவந்த மர்ரே நிறுவனம் அறுபதிற்குப் பின்னர் எந்த ஒரு நூலையும் வெளியிடவில்லை. 1960இல் இலக்கிய வெளியீட்டிற்காக ராஜத்தால் ஏற்படுத்தப்பட்ட ‘சாந்தி சாதனா--’ என்ற அமைப்புதான் சில அகராதிகளை வெளியிட்-டுள்ளது. அறுபதிற்கு முன் வெளியிடப்பட்ட நூல்களுக்கு உருவாக்கிய அரும்பத விளக்கத்-தைத் தொகுத்து வரலாற்று முறைத் தமிழிலக்-கியப் பேரகராதியை 2001இல் ‘சாந்தி சாதனா’ வெளியிட்டுள்ளது. மர்ரே அண்டு நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்ட நூல்களின் விலை ஒரு ரூபாய் என்ற நிலையில் இருந்தது. ‘சாந்தி சாதனா’ என்ற அறக்கட்டளை மூலமாக வெளி-யிடப்பட்ட அகராதிகளின் விலை அதிகமாக உள்ளது. நிறுவனமாக இருந்த காலத்து மலிவு விலையில் நூல்களை வழங்கிய ராஜம் நிறுவனம், அறக்கட்டளையாக மாற்றப்பட்ட பின்னர் நூல்களின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்-டுள்ளது. ஏன் இந்த முரண்பாடென்று தெரிய-வில்லை. அதே நேரத்தில் 1960க்குப் பிறகு நூல் வெளியீட்டுப் பணியை நிறுத்திக் கொண்ட-தற்கான காரணமும் தெரியவில்லை. இவ்வாறான சில ஐயங்கள் இருந்தாலும் சங்க இலக்கிய மூல பாடப்பதிப்பு என்று சொன்னால் மர்ரே ராஜம் நூல்களையே குறிப்பிடும்படியான ஒரு தனித்துவம் இந்நிறுவனப் பதிப்புகளுக்கு என்றும் உண்டு.
அடிக்குறிப்புகள்
1.    வாழ்வியற் களஞ்சியம்_தொகுதி ஒன்று, தமிழ்ப்பல்கலைக்கழகம்_2002, ப.272.
2.    மேலது.
3.    மேலது.
4.    மேலது ப. 273.
5.    பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை(பதி.) திவ்யப்பிரபந்தம் _ முதலாயிரம் _ 1955 _ முன்னுரை, ப. 4.
6.    முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பதிப்பியல் சிந்தனைகள்_2005, ப.37.
7.    ம.பொ.சிவஞானம், சிலம்பில் ஈடுபட்டதெப்படி?_1994, ப.35.
8. மேலது, ப.36.
9.    வ.சுப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள் _ 1958, முன்னுரை, ப.4.
பின்னிணைப்பு 1
கால நிரலில் மர்ரே நிறுவனப் பதிப்புகள்:
1955    ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ முதலாயிரம்
1956    ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் _ திருவாய் மொழி, இயற்பா, பெரிய திருமொழி
1957    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு-நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு (முதல் தொகுதி), திருவாசகம், கல்லாடம், சிலப்பதிகாரம், மணிமேகலை,         கலிங்கத்துப்பரணி, அஷ்டபிரபந்தம்.
1958    அகநானூறு, புறநானூறு, பாட்டும் தொகையும், கம்பராமாயணம் _ பாலகாண்டம் (தொகுதி_1), அயோத்தி காண்டம் (தொகுதி_2), ஆரணிய காண்டம் (தொகுதி_3), கிட்கிந்தா காண்டம் (தொகுதி_4), சுந்தர காண்டம் (தொகுதி_5).
1959    பதினெண்கீழ்க்கணக்கு (தொகுதி_2), கம்பராமாயணம்_யுத்தகாண்டம் (நான்கு தொகுதிகள்), வில்லிபாரதம் (நான்கு தொகுதிகள்), அருங்கலச்செப்பு, அறநெறிச்சாரம், குலோத்துங்க சோழன் உலா, நந்திக்கலம்பகம், நீதிக்களஞ்சியம் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி), முக்கூடற்பள்ளு, நளவெண்பா.
1960    தொல்காப்பியம், குற்றாலக் குறவஞ்சி, சாசனவிளக்கம், சந்தி குறியீட்டு விளக்கம்.
பின்னிணைப்பு 2
ஆசிரியர் குழுவால் பரிசோதித்துச் சந்தி பிரித்து இன்றுவரை வெளியிடாமல் உள்ளவை:
இலக்கியம் : சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, நீலகேசி, யசோதர காவியம், முத்தொள்ளாயிரம்.
சிற்றிலக்கியம் : பாண்டிக்கோவை, மூவருலா, தக்கயாகப்பரணி, திருநாரையூர் நம்பி மேகவிடு தூது, விறலிவிடு தூது, திருக்கலம்பகம், திருவருணைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம், அழகர்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம்.
பக்தி இலக்கியம் : திருக்கோவையார், திருவிசைப்பா, திருமந்திரம், பதினோராம் திருமுறை, கோயிற்புராணம், திருக்கடைக்காப்பு, தேசிகப்பிரபந்தம், ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் அவதாரப்ரகாரம், வார்த்தமாலை.
இலக்கணம் : நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், புறப்பொருள்வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், இறையனாரகப்-பொருள், பன்னிருபாட்டியல், வெண்பாப்-பாட்டியல், தமிழ்நெறிவிளக்கம்.
துணைநூற் பட்டியல்
1. சுந்தரமூர்த்தி. இ. முனைவர் _ பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், முதற்பதிப்பு_2005.
2. மாணிக்கம். வ. சுப. டாக்டர். (ப.ஆ) _ இரட்டைக்காப்பியம், செல்வி பதிப்பகம், முதற்பதிப்பு _ ஜனவரி. 1958.
3. விநாயகமூர்த்தி. அ. _ பதிப்புப் பார்வைகள், பாலமுருகன் பதிப்பகம், முதற்பதிப்பு_ஜூன் 1983.
4. வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி (முதல் தொகுதி), சாந்தி சாதனா, முதற்பதிப்பு_2001.
5. சிவஞானம், ம.பொ.டாக்டர். _ சிலம்பில் ஈடுபட்டதெப்படி?, பூங்கொடி பதிப்பகம், முதற்பதிப்பு, ஜூன் 1994.
6. ஆசிரியர் குழு _ சந்தி குறியீட்டு விளக்கம், மர்ரே அண்ட் கம்பெனி
7. பாலுசாமி. ந. முனைவர். (மு.ப.ஆ) _ வாழ்வியற் களஞ்சியம்_தொகுதி ஒன்று, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு_2002.

No comments:

Post a Comment