Tamil books

Thursday 1 August 2013

உலக நிதி மூலதனம்



வெளியீடு பாரதி புத்தகாலயம்
என்.எம்.சுந்தரம்
இ.எம்.ஜோசப்
விலை ரூ.200
 336 பக்கங்களைக் கொண்ட “தகர் நிலையில் உலக நிதி மூலதனம்'' என்ற நூல் மேலை நாட்டுப் பொருளாதாரக் கோட்பாடுகளின் நச்சுத்தன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தநூல் பொதுவாக இன்றைய பொருளாதாரப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப்பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். அதைவிட இந்தநூல் ஒரு மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரகனுக்கு உதவும் கையேடு எனலாம்.
இந்த நூலின் சிறப்பு பொருளாதார, அரசியல் துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களையும், ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும் ஆழ்ந்து படித்து, பரிசீலித்து, சலித்து தேவையானதைத்  தேர்வுசெய்து  எழுதப் பட்டுள்ளது என்பதே. இன்று பிரபலமாக இருக்கும் போன நூற்றாண்டு கீன்ஸ் முதல் நோபல் பரிசுபெற்ற சந்தை நிபுணர்கள் மில்ட்டன் பிரிட்மென், பால்க்ரெக்மென், குடிக்கிளிட்கு, மற்றும் ஜான்கால்பிரெயித் வரை உள்ள ஆங்கிலோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள்,அவர்கள் எழுதிய நூல்கள், சொன்ன கருத்துக்கள் இவைகளை வைத்தே அந்த கோட்பாட்டு நச்சை இந்த நூல் வாசகனுக்கு காட்டுகிறது
.
இந்த நூலின் இன்னொரு சிறப்பு, இன்றையத் தேதிகளில்  மேலை நாட்டு  அரசியல் பொருளாதார நிபுணர்கள் நடத்தும் கோட்பாட்டு சண்டைகளை இலக்கிய நடையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பொருளாதாரம் என்றாலே விளக்கெண்ணை என்று கருதுபவர்கள் கூட, தலைப்புக்களை பார்த்து படிக்கத் தொடங்கிவிடுவர், பின்னர்  முழுவதையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழேவைக்க மாட்டார்கள். இந்த நூலில் 27 தலைப்புக்களில் பொருளாதார பிரச்சனைகள் அலசப்படுகிறது. 27 தலைப்புக்களுமே படிப்பவர்களை மேலும் படிக்கத் தூண்டவல்லது. சான்றாக சில தலைப்புக்களை பாருங்கள் “உருகி அழியும் ‘உலக நிதிச் சந்தை’ தத்துவத்தின் இறுதி யாத்திரை கீதம்' (4), “போன்சியை மிஞ்சும் போன்சி'' (14) “டாலர் சாம்ராஜ்யத்தின் பிரசவ வேதனை'' (19) “கடவுள் கைவிட்டபோது அன்றும் இன்றும்" (1929_-30 & 2008_-2010) (23).

இந்த நூலில் போகிறபோக்கில் குறிப்பிடுகிற சில விஷயங்கள் நம்மை அதை நோக்கி ஓடி தேட வைத்துவிடுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் என்ற கேடயத்தை, எப்படி ஒரு நிறுவனம் ஏமாற்றுக்களை உருவாக்கி பாலிசிதாரிகளின் பணம் மாயமாக மறைந்ததைக் குறிப்பிடுகிற பகுதியில் (பக்கம்71_-97) ஜான்கிரிஷாம் எழுதிய ரெயின் மேக்கர்  என்ற   புதினம் குறிப்பிடப்படுகிறது. அந்தப் புதினம் அமெரிக்கப் பணம் பன்னிகள் (மனி மேக்கர்ஸ்) இன்சூரன்சை ஏமாற்றுக் கருவியாக்கி மக்களை ஏமாற்றக் கையாண்ட யுக்திகளை அம்பலப்படுத்துகிறது. இந்தக் குறிப்பு அந்த நாவலையும் சினிமாவையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதுபோல் அமெரிக்கத் தத்துவ மேதை ஜான் ராவ்ல்சின் மேற்கோளைப் படிக்கிற பொழுது அவர் எழுதிய நீதியின் கோட்பாடு (தியரி ஆப் ஜஸ்டிஸ்) என்ற நூலைத் தேட ஆர்வம் பிறக்கிறது.

இன்றைய மேலை நாடுகளின் உந்து சக்தியால் இயங்கும் ’உலகமய பொருளாதாரத்தின்’ விளைவுகளைப் “பணம் பண்ணுகிற" கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பதைப் புரிய இந்த நூல் உதவுகிறது.பணம் என்ற ஒன்று வர்த்தக மூலதன வடிவிலும், தொழில் மூலதன வடிவிலும் சுழன்று, சுழன்று சரக்குகளை உருவாக்கி, பரிவர்த்தனை மூலம் பரவலாக்கி மக்கள் நுகர வழிவகுப்பதையே பொருளாதாரம் என்கிறோம். இந்த இரண்டு வடிவ வழிகளை புறம்தள்ளிப் பணத்தை (நிதி மூலதனம்) நேரடியாகப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும் பணத்தின் அளவு கூடுகிறபொழுது பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகிறது, இதுதான் இன்று மேலைநாடுகளைப் பிடித்திருக்கும் நோயாகும். ஒரு கட்டத்தில் அது குமிழியை உருவாக்கி நிதி மூலதன அமைப்பை தகர்த்துவிடுகிறது. அப்படி  “ஒரு நோய் மேலை நாடுகளின் செலவாணிகளுக்கு வந்துவிட்டது. அதன்விளைவாகப் பொருள் உற்பத்தி படுத்து குமிழி (பபுள்) தோன்றி தகர்நிலைக்கு உலக நிதி மூலதனத்தை தள்ளிவிட்டது" என்று கூறும் மேலை நாட்டுப் பொருளாதார நிபுணர்களும், “இது நோயல்ல வளர்ச்சியின் அறிகுறி, தனிமனித சுதந்திரத்திற்கு இது தேவை” என்று கூறும் பொருளாதார வல்லுநர்களும் மோதும் நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த மோதலை பற்றி கட்டத்திற்கு கட்டம் கவனப்படுத்தும் விளக்கமாகவும் (ரன்னிங் கமென்டரி) இந்த நூல் உள்ளது. அதேநேரம் இந்த நோய் ஒட்டுவார் ஒட்டி வகையானதால் உலகமயத்தால் எல்லா நாட்டு செலவாணிகளையும் எப்படித் தொத்தி குமிழியாக வீங்க வைக்கிறது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

புத்தகத்தின் துவக்கமே வாஷிங்டன் போகுட் என்ற அமெரிக்கப் பத்திரிகை அமெரிக்க நிதி நெருக்கடியைப் பற்றிய செய்தியைச் சொல்லி குமிழி “பபுள்” என்ற நவீன பொருளாதார நோயை விளக்குகிறது. முன்பெல்லாம் பணவீக்கம், (இன்பிளேசன்) தேக்கவீக்கம்  (ஸ்டாக்பிளேசன்) என்ற  நோய்களே ஒரு நாட்டு பொருளாதாரத்திற்கு வரும். அரசு அந்த நோயைப்  போக்கிவிட முடியும். பபுள் என்ற புதிய பொருளாதார நோய் அரசாலும், யாராலும் குணப்படுத்த முடியாத புற்றுநோய். இந்த புற்றுநோயால் பணம் பெருகிக்கொண்டே போகும். நோபல் பரிசுபெற்ற சந்தைநிபுணர் பால்கிரெக்மென்னை மேற்கோள் காட்டி இந்த பணத்திற்கு வந்த இந்த குமிழி நோய் சந்தையால் வருகிறது என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது. அதற்கு அடுத்த பகுதி சந்தையால் நோய் எப்படி வந்தது என்பதை விளக்குகிறது. கடவுள் கைவிட்டபோது (23வது) என்ற பகுதியிலும் சில விளக்கங்கள் உள்ளன. 1929 களில் இப்படி ஒரு நெருக்கடி பங்குச் சந்தையால் ஏற்பட்ட பொழுது மேலை நாட்டு அரசுகள் சில சந்தை நெறிமுறைகளைப் பின்பற்ற சட்டங்களை இயற்றின. அதில் சில நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக ஆக்கின, 1970ல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் மில்டன் பிரிட்மென்னின் பணம் பண்ணும் சுதந்திரம் கோட்பாடு மக்களைக் கவ்விப்பிடிக்கவே மூலதன அமைப்பே தகர்நிலைக்கு வந்தது என்பதை இப்பகுதிகள் காட்டுகின்றன. தங்கத்திற்கும் டாலருக்கும் உள்ள உறவை (பக்கம் 107) நிக்சன் துண்டிக்க மில்டன் பிரிட்மென்னின் கோட்பாடே காரணமாகியது.

1980களில் ரீகன்,தாட்சர் ஆட்சிக்காலத்தில் இந்த சட்டங்களின் பற்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டு புஷ் ஆட்சிக்காலத்தில் நெறிமுறைகளே புதைக்கப்பட்டன. சந்தை தாறுமாறாகப் போனாலும் அரசு தலையிட முடியாத நிலை வந்துவிட்டது.

சந்தைகளின் பேயாட்டம்(பக்கம்49) என்ற பகுதி பணம் எப்பொழுது பேரழிவு ஆயுதமாகிறது என்பதை விளக்குகிற பகுதியாகும். வாரன் பபெட் என்ற அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர் அணுகுண்டைவிட  அதிகப் பேரழிவைக் கொண்டுவரும் ஆயுதமாக பணத்தை ஆக்கும் செயலை சுட்டிக் காட்டுகிறார். கடன் பத்திரங்கள், கடன்மாற்றுப் பத்திரங்கள் பேரழிவைக் கொண்டுவரும் நிதி ஆயுதங்கள் (பினான்சியல் வெப்பன் பார் மாஸ் டெஸ்டரக்ஷன்) என்று அவர் வர்ணிப்பதை மேற்கோளாக இந்நூல் காட்டுகிறது.

மேலைநாடுகளின் பணக்கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகளை இந்த நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது. தாமஸ்கிரஸ்ஹாம் குறிப்பிட்ட கெட்டபணம் நல்ல பணத்தை விரட்டுகிறது, ஸ்டிக்கிளிட்ஸ் விளக்கிய பணம் எப்போது குப்பையாகும் (பக்கம் 89) இவைகளைக் காட்டுவதோடு, பணம் எப்போது டைம்பாமாக ஆகிறது என்பதையும் குறிப்பிடுகிறது..

இந்தநூலின்  25வது   பகுதியைப்  படிக்கிறபொழுது மனதிலே ஒன்று படுகிறது.அமெரிக்க கலாச்சார சீரழிவை அப்பகுதி படம் பிடித்துக்காட்டுகிறது. அதோடு அமெரிக்க நிபுணர்களும் அமெரிக்க நாடாளுமன்றமும் இன்றைய பொருளாதாரத்திற்கு  வந்திருக்கும் நோயையும் அது எவ்வாறு உலகளவில் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்துவிட்டனர், வேதனை என்னவெனில் இதற்கான வைத்தியமுறைதான் நோயைவிடக்  கொடுமையாக உள்ளது என்ற உண்மை தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அமெரிக்க வங்கிகளின் அதிகார துஷ்பிரயோகம், மோசடி இவைகளைக் கண்காணிக்க செனட்டர் பிராங்சர்ச் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை இந்தப் பகுதி காட்டுகிறது.

 அந்தக் கமிட்டி கண்டுபிடிப்புகளில் ஒன்று பிறநாடுகளின் முதலீட்டை அமெரிக்க வங்கிகள் ஈடுபடுத்திய விதம் உலகச் சந்தையில் நெருக்கடியை விளைவித்ததைக் கண்டதாகும். போன்சியை மிஞ்சிய  போன்சி என்ற தலைப்பில் கூறுபவைகளை உள்வாங்கினால், அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தில் புரட்சிகர மாற்றங்களின் அவசியத்தை உணர முடிகிறது.  எது உன்னதமானது என்ற பார்வையே அங்கு கோளாறாக உள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது.  பணம் பண்ணுவதற்கு எது உதவுமோ அது உன்னதமானது என்ற பார்வையே அங்கு மக்களை அலைக்கழிக்கிறது.

இத்தகைய மேற்கத்திய பண்பாடுகளிலும், தத்துவப் பார்வையிலும் சமீபகாலமாக ஏற்பட்ட திரிபுகளை எதிர்க்கும் கருத்துக்களுக்கும் அங்கு பஞ்சமில்லை என்பதை ஜாஜ் ராவ்ல்கு என்ற தாராளமனப்பாங்கு கொண்ட அமெரிக்க தத்துவ ஞானியின் கருத்தை மேற்கோளாக இந்த நூல் காட்டுகிறது. சோசலிச மனப்பாங்கின் சில கூறுகள் அதில் இருப்பதையும் காட்டி நூல் நிறைவுபெறுகிறது. நூலாசிரியரின் மேற்கோள்கள் அனைத்தும் 1970க்குப்பிறகு உருவான சுதந்திரச் சந்தையால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கும் இருக்கிறார்கள் என்பதையும் ஏகாதிபத்திய ஆசைகளைக் கொண்ட அரசுகள் தனிமைப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது,

படித்து முடித்தவுடன் மேலைநாட்டுப் பொருளாதாரக் கோட்பாடுகளையும், பணவியல் கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் நாம் காப்பி அடித்தால் உருப்படமாட்டோம். என்ற எண்ணம் உறுதிப்படுவதோடு நிற்கவில்லை. மேலைநாட்டு முதலாளித்துவத்திற்கு இறுதி கீதம் பாடி புதைக்காமல் விட்டால் அது மானுடத்தைப் புதைத்துவிடும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஜனநாயக அரசியலை நிலை நாட்டும் இயக்கங்களிலே பங்குபெறும் ஆர்வம் பிறக்கிறது.

இந்த நூலின் ஆசிரியர் என்.எம் சுந்தரம் அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்சங்க தலைமைப் பொறுப்பை வகித்தவர் என்று மட்டும் சொல்வது அறிமுகமாகாது. 1970_-80 களில் சென்னை நகரத்  தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டக்களத்தில் வழிநடத்திய தளபதிகளில் ஒருவர். இன்சூரன்ஸ்,  அரசு ஊழியர், வங்கி ஊழியர், மத்திய அரசு ஊழியர், ஆயில் நிறுவனம். டிரான்ஸ்போர்ட், மின்சாரம், துறைமுகம் இந்தப்  பாசறைகளில் உருவான இந்தத் தளபதிகளின் கிளர்ச்சிப் பிரச்சாரமே சென்னை நகரில் அன்று வர்க்க ஒற்றுமையை உருவாக்கியது. அவரது ஆழ்ந்த பொருளாதார ஞானமும், வர்க்க போராட்டக் களத்து அனுபவமும் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் மிளிர்வதை வாசகன் என்ற முறையில் நான் உணர்ந்தேன்.
இந்த நூலின் ஒரு குறை இன்சூரன்ஸ் மாத இதழில் தொடராக வந்ததை அப்படியே தொகுத்து வெளியிட்டது. அதன் காரணமாக சில கருத்துக்கள்  திரும்பத் திரும்ப வருவதாகத் தோன்றும். அதை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம். என். எம் சுந்தரத்தின் இலக்கிய நயம் கொண்ட ஆங்கிலக் கட்டுரைகளை நயம் குறையாமல் மொழிபெயர்த்த  இ.எம். ஜோசப்  பாராட்டுதலுக்கு உரியவராகிறார். இந்த நூலை அடுத்த பதிப்பில் எடிட் செய்து வெளியிட்டால் பக்கங்களும் குறையும், படிக்க வேண்டிய மக்கள் கையில் மலிவு விலையில் சேரும்.

No comments:

Post a Comment