Tamil books

Monday 26 August 2013

நேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி


கண்ணாடியைப் பார்ப்போம்
அ. முத்துலிங்கம்
எர்டாக் கோக்னர்,

சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசியபோது அவர் சொன்ன ஒரு விடயம் ஆச்சரியம் தந்தது. அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில நாவலையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள் பிரெஞ்சு மொழியில் நாவல் மேலும் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றார். நான் கேட்டேன் ‘உங்களுக்கு வருத்தமாய் இருந்திருக்குமே?’ அவர் ‘ஏன் வருத்தமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சிலும் புகழ் எனக்குத்தானே?’ என்றார்.

அவர் அப்படிச் சொன்னது நான் பலகாலமாக நினைத்துவந்த ஒரு விடயத்தை உறுதிசெய்தது. எத்தனை மொழியில் ஒரு நாவல் மொழிபெயர்க்கப்பட்டாலும் புகழ் போய்ச் சேருவது எழுத்தாளருக்குத்தான். மொழிபெயர்ப்பாளருக்கு அல்ல. அடுத்து, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது சேதாரம் உண்டு. அதைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் மூலநூலிலும் பார்க்க ஒரு மொழிபெயர்ப்பு சிறந்ததாக இருக்கிறதெனச் சொன்னால் அதை எப்படி நம்புவது? எப்பொழுதும் ஒரு மொழிபெயர்ப்பில் எஞ்சுவது 80 சதவீதமே என்று பலர் எழுதியிருக்கிறார்கள். நான் டேவிட் டங்கன் சொன்னதைச் செவிமடுத்தாலும் முழுதாக நம்ப மறுத்துவிட்டேன். என்னுடைய எண்ணத்தை விரைவிலேயே மாற்ற வேண்டியிருக்குமென்று நான் அப்போது நினைக்கவில்லை.

 ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த என் பெயர் சிவப்பு நாவலைப் படித்தபோது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இத்தனை உழைப்பைக் கொடுத்து மிகத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார். இதே மாதிரித்தான் ஆங்கிலத்திலும் ஒருவர் துருக்கி மொழியிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர்களை ஒருவரும் கவனிப்பதில்லை. அவர்களுக்குப் பாராட்டுகள் இல்லை; சன்மானம் இல்லை. இந்த இரு மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்களை, அவர்களது நேர்காணல் கண்டு, வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமெனத் தோன்றியது.

ஆனால் நினைத்ததைச் செயல்படுத்துவது அப்படி ஒன்றும் எளிதாக இல்லை. ஓரான் பாமுக்கின் நாவலை ஆங்கிலத்தில் My Name is Red என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் எர்டாக் கோக்னர் (Erdag Goknar). மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் எழுதுவதில்லை. தொலைபேசி அழைப்புகள் தகவல் பெட்டியில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக விழுந்துகிடக்கும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் திடீரென்று ஒரு நாள் மின்னஞ்சலில் சம்மதம் தெரிவித்தார். ஜி. குப்புசாமியைத் தொடர்புகொண்டபோது அவரும் நேர்காணலுக்கு உடன்பட்டார்.

முதலில் எர்டாக் கோக்னரிடம் தொலைபேசினேன்.

மொழிபெயர்ப்பில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

சிறுவயதில் இருந்தே இரண்டு மொழிகளிலும் நான் மாறி மாறிப் பேசுவேன். ஆரம்பத்தில் சில கவிதைகளையும் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

அமெரிக்காவின் டபிள்டே பதிப்பகம் நூறு வருடப் பாரம்பரியம் கொண்டது. அவர்கள் ஓரானின் நூலை ஆங்கிலத்தில் வெளியிட முடிவுசெய்தபோது எப்படி அந்தப் பணியை உங்களிடம் கொடுக்கத் தீர்மானித்தார்கள்?

ஓரான் பாமுக் என்னை ஒரு நாள் அழைத்தார். அப்போது எனக்கு வயது 32. அவருடைய நூலின் ஓர் அத்தியாயத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கும்படி கூறினார். டபிள்டே பதிப்பகம் மேலும் மூன்று பேரிடம் அதே வேலையைக் கொடுத்திருந்தது. ஒரு பரீட்சை போலத்தான். அதில் எப்படியோ நான் தேறி மொழிபெயர்ப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டேன்.

ஓரானின் பல நாவல்களை ஏற்கனவே திறம்பட மொழி பெயர்த்திருந்த Maureen Freelyயும் பரீட்சையில் பங்கு பற்றினாரா?

இல்லை. அவரைத் தவிர்த்துவிட்டார்கள்.

உங்களுடைய மொழிபெயர்ப்பு நடைமுறை ஒழுங்கு தினம் 
எப்படி இருந்தது?

முழு நாவலையும் 5 தொகுதிகளாக, ஒரு தொகுதிக்கு 100 பக்கங்கள் என்று பிரித்தேன். இரண்டு பக்கங்களுக்கு ஒரு தாளாக ஒளிநகலில் பிரதி எடுத்துப் பெரிதாக்கி வைத்துக்கொண்டு மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பாமுக் நீண்ட வசனப் பிரியர். அந்த வசனங்களைத் துண்டு துண்டாகப் பிரித்து அடிக்கோடிட்டு, குறிப்புகள் குறித்துவைத்துக் கையாலேயே எழுதி மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அதன் பின்னர் மடிக்கணினியில் அவற்றைத் தட்டச்சு செய்தேன். அப்படிச் செய்தபோதே மேலும் திருத்தங்கள் செய்தேன். மொழிபெயர்ப்பைப் படித்துப் படித்துத் திருத்துவதை நிறுத்த முடியவில்லை. மிகை இல்லாமல் சொல்வதானால் 100 தடவைகள் திருத்தியிருப்பேன்.

உங்களுக்கும் பதிப்பகப் பிரதி மேற்பார்வையாளருக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது?

உறவு சுமுகமாகவே இருந்தது. அவருக்குத் துருக்கி மொழி தெரியாது ஆகவே அவர் மொழிபெயர்ப்பு பற்றிக் கருத்து சொல்லவில்லை. ஆங்கில வசன அமைப்பில் அவர் செலுத்திய கவனம் பிரதியை மேலும் துல்லியமாக்கியது. மேம்படுத்தியது. சில வார்த்தைகள் தேவையா முன்பின் முரணாக இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்த்தார். ஆகவே பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. புத்தகத்தின் தலைப்பாக நான் பரிந்துரைத்தது ‘My Name is Crimson.’ துருக்கிய நாவல் தலைப்புடன் அது மிகவும் ஒத்துப்போனது. ஆனால் மேற்பார்வையாளர் My Name is Red என்பதை விரும்பினார். அப்படியே நடந்தது.

ஓரான் பாமுக் பிரதியைப் படித்துப் பார்க்கவில்லையா?

இல்லாமலா? அவரும் நானும் ஒன்றாக மொழி பெயர்ப்பைச் சரிபார்த்தோம். நாளுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து வேலைசெய்தோம். இந்த முயற்சியில் லாபம் அடைந்தது நான்தான். ஒரு மாபெரும் படைப்பாளிக்கு அருகாமையில் இருந்து பணிபுரிய நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவருடைய கற்பனையின் வேகமும் ஆழமும் என்னை ஆச்சரியப்படவைத்தன. அவரிடமிருந்து நுட்பமான பல விசயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் மொழிபெயர்த்த நாவலின் ஆசிரியருக்கு நோபல் பரிசு கிடைத்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? அந்தச் செய்தி எப்படி உங்களை அடைந்தது?

2006ஆம் ஆண்டு, ஒக்டோபர் 12ஆம் தேதி மாலை. அவசரமாக ஒரு நேர்காணலுக்காக டர்ஹாம் நகரத்து வீதி ஒன்றில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது ஓரானிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது. நோபல் பரிசு தனக்குக் கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்லி எனக்கு நன்றி கூறினார். அத்தனை மகிழ்ச்சியை நான் அதற்கு முன்னர் அனுபவித்தது கிடையாது. செல் பேசியைத் துண்டித்த பின்னரும் அந்தச் செய்தி என் நெஞ்சுக்குள் கிடந்து துள்ளியது. அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள மனம் துடித்தது. ஆனால் வீதியில் ஒருவருமே இல்லை. வெறும் கட்டடங்களும் வாகனங்களும் மரங்களும்தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு நாட்களில் அந்த நாள் ஒன்று.

இரண்டு நாட்களா? அந்த இன்னொரு நாள் என்ன?

இப்பொழுது நான் பேராசிரியராகப் பணியாற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எனக் கூடியிருந்த சபையில் ஒருமுறை ஓரான் பாமுக் பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தான் எழுதிய துருக்கி மொழி நாவலிலும் பார்க்க அதன் ஆங்கில மொழி பெயர்ப்பான My Name is Red சிறப்பாக வந்திருப்பதாகக் கூறினார். அவருடைய பெருந்தன்மை, அப்படிச் சொன்னார் என்று நினைக்கிறேன். வேறு யாரும் அப்படி ஒரு சபையில் அப்படியான புகழ் வார்த்தைகளைப் பேசியிருக்கமாட்டார்கள்.

டபிள்டே வெளியிட்ட உங்கள் மொழிபெயர்ப்பு நாவலின் விற்பனை எப்படி இருந்தது? நாவல் வெளிவந்த பின்னர் உங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறீர்களே!

ஆங்கிலத்தில் இந்த நூல் 20,000 படிகள் மட்டுமேவிற்கும் எனத் திட்டமிட்டுத்தான் பதிப்பகத்தினர் வெளியிட்டார்கள். ஆனால் நோபல் பரிசு அறிவித்ததும் விற்பனை 2,00,000 இலக்கத்தைத் தாண்டி அமோகமாக விற்கத் தொடங்கியது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஓரானும் எதிர்பார்க்கவில்லை. இதில் நடந்த இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நோபல் பரிசு அறிவித்த பின்னர் ஓரான் ஏற்கனவே எழுதி மற்ற பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களும் அமோகமாக விற்க ஆரம்பித்துவிட்டன. என்ஜினில் தொடுத்த பெட்டிகள்போல என் பெயர் சிவப்பு மற்ற நூல்களையும் இழுத்துக் கொண்டு ஓடியது.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு சன்மானம் உண்டா?

நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ஒருவர் எப்படி வாழ முடியும்? ஓரானின் மொழிபெயர்ப்பை முடித்த பின்னர்தான் ஒரு விசயத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன். நான் மொழிபெயர்த்த My Name is Red நாவல் ‘Dublin IMPAC’ இலக்கிய விருதைப் பெற்றது. உலகத்தில் புனைவு இலக்கியத்துக்குக் கிடைக்கும் ஆகப் பெரிய விருது என்பது பரிசுப் பணம் அறிவித்தபோது தான் எனக்குத் தெரிந்தது. ஏறக்குறைய 1,30,000 அமெரிக்க டொலர்கள். இதில் விசேடம் என்னவென்றால் பரிசு அறிவிக்கப்பட்டபோதே மொத்தப் பணத்தில் 25 சதவீதம் மொழிபெயர்ப்பாளருக்கு என்று குறிப்பிட்டிருந்ததுதான். அதை ஒரு விதியாகவே பரிசளிக்கும் நிறுவத்தினர் கடைப்பிடித்தனர். இதை மற்றைய பரிசு வழங்கும் நிறுவனங்களும் கவனத்தில் வைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

இன்னொரு விசயம் கூறியிருந்தீர்கள். ஓரானின் நாவல் வசனங்களைப் படிக்கும்போது அவை ஓர் இசை லயத்துடன் ஒலிக்கும், அந்த லயத்தையும் அப்படியே ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்குப் பெருமுயற்சி எடுத்திருக்கிறீர்கள். அது முக்கியமானதா?

மொழிபெயர்க்கும்போது நான் நாள்தோறும் ஒரு திட்டத்துடன்தான் செயல்பட்டேன். குறைந்தது ஒரு நாளுக்கு 3 பக்கங்கள் மொழிபெயர்க்க வேண்டும். இந்த நியதியில் இருந்து நான் ஒரு நாள்கூடத் தவறியது கிடையாது. நாளுக்கு குறைந்தது 4 மணிநேரம், சிலவேளை 8 மணிநேரம்கூட வேலை நீண்டதுண்டு. இரவிலே வேலை முடித்துப் படுத்தால் வசனங்கள் மூளைக்குள் ஓடும் சத்தம் எனக்குக் கேட்கும். காலையில் எழும்பி முதல்நாள் மொழிபெயர்த்ததைப் படித்தால் அவை புது ஆங்கில வசனங்கள்போல இருக்கும். இரவு அவற்றுடன் போராடியது மறந்துபோகும். ஓரளவுக்கு மூலநூலில் சொன்ன கருத்து பேப்பரில் வந்த பின்னர் வசன அமைப்பை ஒரு லயத்துடன் ஒலிக்கவைப்பதற்காக முயல்வேன். துருக்கியில் வசனங்கள் படிக்கும்போது ஓர் இசை வடிவமாகவே இருக்கும். அதை ஓரளவுக்கு ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.

இந்த மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஏற்பட்ட நூதனமான 
சம்பவம் ஏதாவது உண்டா?

19ஆம் அத்தியாயத்தில் முதல் வசனம் மொட்டையாகத் தொடங்கியது. துருக்கி மொழியில் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ஆங்கிலத்தில் தொடக்கம் சரியாக வரவே இல்லை. ஆகவே ஒரேயொரு சொல்லை - Behold என்ற வார்த்தையை - ஆரம்பத்தில் நுழைத்ததும் எல்லாம் சரியாகிவிட்டது. மொழிபெயர்ப்பாளருக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தேன். இந்த நூல் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். அதிலே 19ஆம் அத்தியாயத்தில் முதல் வார்த்தையாக நான் புகுத்திய வார்த்தையே இருந்தது. துருக்கியில் இருந்து ரஷ்ய மொழிக்கு நேரடியாக மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்திலிருந்து அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது எனக்கு உடனே புரிந்தது.

இந்த நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்த்தவர் பெயர் ஜி. குப்புசாமி. உங்களைப் போலவே அதிசிரமமெடுத்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.

‘அப்படியா? அந்த வார்த்தை தமிழில் இருக்கிறதா பாருங்கள்’ என்றார். ( நான் பார்த்து அந்த வார்த்தை இருப்பதாகச் சொன்னதும் சந்தோசப்பட்டார்.)

துருக்கி தேசத்தின் பிதா அட்டர்துக் 1928ஆம் ஆண்டு பழைய துருக்கி மொழியை ஒழித்துப் புதிய துருக்கி மொழியை உண்டாக்கினார். பழைய துருக்கி மொழி அரபு எழுத்துரு கொண்டது. புதிய துருக்கி மொழி லத்தீன் எழுத்துமுறை கொண்டது. அத்துடன் பழைய துருக்கியில் புழங்கிய அரபு மற்றும் பாரசீக வார்த்தைகளும் ஒழிக்கப்பட்டன. நூறு வயதுகூட ஆகாத ஒரு புது மொழியில் இலக்கியம் படைத்ததும் அந்த எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றதும் சாதனைகள் அல்லவா? 1000 வருடத்துக்கு மேலான பழைய துருக்கி இலக்கியங்கள் அழிகின்றனவா?

ஓரான் புதிய துருக்கி மொழியில்தான் படித்தார். அவர் எழுதியதும் புதிய துருக்கி மொழியில்தான். ஆனால் பழைய அரபிக் வார்த்தைகளையும் பாரசீக வார்த்தைகளையும் அவ்வப்போது பயன்படுத்தத் தவறவில்லை. நாவலை வாசிக்கும்போது இசை ஒலி எழுவது அந்தக் காரணத்தால்தான். ஓரானின் அபரிமிதமான கற்பனை வளமும் மொழி ஆளுமையும்தான் அவருக்கு நோபல் பரிசை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. பழைய துருக்கி இலக்கியங்கள் இளம் தலைமுறையினரால் படிக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் புதிய துருக்கியில் மொழிபெயர்க்கும் வேலை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

கேள்விகளுக்குக் கோக்னர் பொறுமையாகவும் உண்மையாகவும் பதிலளித்தார். நான் அவருடைய நேரத்துக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.


ஜி.குப்புசாமி

ஜி. குப்புசாமி தமிழில் மொழிபெயர்த்த என் பெயர் சிவப்பு நாவலை அதன் ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபடியே படித்தேன். அதிலே எனக்கு ஓர் இடைஞ்சல் இருந்தது. ஆங்கில நாவலை மின்புத்தகத்தில் (கிண்டில்) படித்ததால் பக்க எண் என்னவென்று பார்க்க முடியாது. 3 சதவீதம், 7 சதவீதம், 34 சதவீதம் என்று எவ்வளவு படித்து முடிக்கப்பட்டிருக்கிறது என்னும் கணக்கு விவரத்தையே அது கொடுக்கும். சிரமம் எனினும் தமிழில் ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து அதை ஆங்கில வரியுடன் ஒப்பிடுவதைத் தொடர்ந்து செய்தேன். ஆங்கிலத்தில் மிக நீளமான வசனங்களைப் படித்துத் திகைத்துப்போய் இதை எப்படித் தமிழில் மொழிபெயர்ப்பது என்று யோசித்துக்கொண்டே அந்தத் தமிழ் வசனத்தைத் தேடிப் படித்தால் மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல் வசனம் கச்சிதமாக அமைந்திருக்கும். நெடுங்காலமாக மொழிபெயர்ப்பு நூல்களை மூலத்துடன் ஒப்பிட்டுப் படிக்கும்போது எந்த வாசிப்பு எளிமையாகவும், கூடிய இன்பம் தருவதாகவும், படைப்பின் ஆத்மாவைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது என்பதைக் கூர்ந்து பார்ப்பதுண்டு. அந்த விதத்தில் ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் எனக்கு அதிக மரியாதை இருந்தது ஆனால் அவருடன் பேசியது கிடையாது. ஒரு நாள் அதிகாலை அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். கேள்விகளுக்கு உடனேயே பதில் அளித்தார். சில விவரங்களை மின்னஞ்சலிலும் அனுப்பினார்.

நீங்கள் மொழிபெயர்ப்பு துறைக்கு எப்படி வந்தீர்கள்?

ஆரம்பத்திலிருந்தே புத்தக வாசிப்பு, அதிலும் குறிப்பாகத் ‘தற்கால உலக இலக்கிய’ங்கள் என் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் புத்தகங்கள் படிப்பதுதான் வாழ்க்கையாக இருந்தது. 2000ஆம் வருடம் என் மனைவி அகால மரணமடைந்த பிறகு வெறுமை என்னைத் தாங்க முடியாத அளவுக்கு அழுத்தி இரண்டு வருடங்கள் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கக் கூட இயலாதிருந்தது. திருவண்ணாமலையில் உள்ள என் உற்ற நண்பரும் எழுத்தாளருமான பவா செல்லதுரை அந்த நாட்களில் என்மீது காட்டிய அக்கறை மறக்க முடியாதது, உடல்ரீதியாக என்னைக் கடுமையாக உழைக்கவைத்தால் மட்டுமே நான் புத்துணர்வடைவேன் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது,

2002ஆம் வருடம். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்கள் குறித்துத் திருவண்ணாமலையில் தமுஎச சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, அக்கூட்டத்தில் அருந்ததி ராய் அப்போது அவுட்லுக் இதழில் எழுதியிருந்த கட்டுரையை மொழிபெயர்த்து விநியோகிக்கலாம் என்று யோசனை வந்தது, அக் கட்டுரை என்னை ஆழமாகப் பாதித்த ஒன்று. ஓர் அரசியல் விமர்சகரின் கட்டுரையைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கலைஞனின் உக்கிரமான படைப்பைப் போல அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதை நான் மொழிபெயர்க்க ஆரம்பித்ததும் அருந்ததிராயின் கோபமும் கிண்டலும் அச்சு அசலாக என் மொழியில் உருமாற்றமடைந்து வெளிவந்ததைக் கண்டு நானே வியப்படைந்தேன், எனக்கே தெரியாத இன்னொரு பரிமாணம் எனக்குள்ளே இருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். அற்புதமான தரிசனம் அது. அக்கட்டுரையை மொழி பெயர்த்த அந்த நேரத்தில் முற்றிலும் வேறுமனிதனாக உணர்ந்தேன். இந்த உருமாற்றம் எனக்குப் பெரும் ஆறுதலை அளித்து வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியதால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தேன், அப்போது நான் வெகுவாக ரசித்துப் படித்திருந்த ஜூலியன் பார்ன்ஸ், ஏ. எஸ். பையட், காசுவோ இஷிகுரோவின் சிறுகதைகளை மொழிபெயர்த்தேன், எனக்குள் நிகழ்ந்த இந்த மாற்றம் தீப்பற்றுவதுபோல என்னை ஆகர்ஷித்துக்கொண்டது,

எதற்காக My Name is Red நாவலைத் தேர்ந்தேடுத்து மொழிபெயர்த்தீர்கள்?

பத்து வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்
எஸ். ராமகிருஷ்ணன் இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த வாரமே அந்நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்ததும் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டிய நாவல் என்று ராமகிருஷ்ணன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. இந்த நாவலை மொழிபெயர்த்தே தீர வேண்டுமென்ற வெறி அப்போதே உருவாகிவிட்டது, இதைத் தொடர்ந்து பாமுக்கின் மற்ற நாவல்களைத் தேடித் தேடி வாசிப்பது முழுநேரத் தொழிலாகவே மாறிவிட்டது, அந்த வாசிப்பனுபவம் என்னைப் பாமுக்கோடு மேலும் மேலும் இறுக்கமாகப் பிணைத்தது,

இந்த நாவல் தமிழில் வந்தாக வேண்டுமென்று நினைத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. துருக்கிக்கும் இந்தியாவுக்கும் மொகலாயப் பேரரசு காலம் தொடங்கிப் தொடர்பு இருந்திருக்கிறது. மொகலாய ஓவியங்கள், கட்டடக்கலை போன்ற கலை வடிவங்கள் துருக்கியப் பின்புலம் கொண்டவை. எனவே என் பெயர் சிவப்பு நாவலில் வரும் ஒட்டாமன் காலத்து நுண்ணோவிய மரபுக்கு இந்தியாவிலும் தொடர்பு இருக்கிறது, மேலும் (விட்டல்ராவின் ‘காலவெளி’ நாவலைத் தவிர) ஓவியக் கலை. ஓவியர்களின் உலகம் குறித்து எழுதப்பட்ட நாவல் தமிழில் எதுவும் இல்லை. இந்த மொழிபெயர்ப்பு தமிழுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்துவைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது,

மொழிபெயர்ப்புக்கு அனுமதி இலகுவில் கிடைத்ததா?

கலைஞனின் படைப்புச் சுதந்திரத்திற்குக் குறுக்கே அவன் சார்ந்திருக்கும் மதமும் கலாச்சார மரபுகளும் வரும்போது அவனுக்கு நேர்கிற ஆன்மீக, உளச்சிக்கல்கள் இவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்த நாவலில்தான். இது எப்படியும் தமிழில் வந்தாக வேண்டுமென்று நினைத்தேன். 2006 இல் பாமுக்கிற்கு நோபல் பரிசு கிடைத்ததும் அவரது பெயர் தமிழ் இலக்கிய உலகிலும் பிரபலமாகியது, காலச்சுவடு கண்ணனிடம் இந்த நாவலுக்கான மொழிபெயர்ப்பு உரிமையைப் பெற்றுத்தருமாறு தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தேன். 2008இல் உரிமை கிடைத்தது,

உங்கள் மொழிபெயர்ப்பு முறை பற்றிக் கூறுங்கள்? 
எத்தனைமுறை திருத்தி எழுதுவீர்கள்?

இந்த நாவலை மொழிபெயர்த்து முடிக்க 18 மாதங்கள் பிடித்தன. எனவே மொழிபெர்ப்புச் சடங்குகளை இங்கே சொல்லியாக வேண்டும். மொழிபெயர்க்கத் தொடங்குவதற்கு முன்பே அந்த நூலைக் கட்டாயமாக முதலிலிருந்து கடைசிவரை மூன்றுமுறை வாசித்துவிட்டேன். முதல் வாசிப்பு சாதாரணமானது. அப்போது அந்த நாவலை மொழிபெயர்ப்போமா எனத் தெரியாத நிலையில் வெறும் வாசிப்பனுபவத்திற்காக மேற்கொண்டது. மொழிபெயர்ப்பதற்காகப் படித்தது இரண்டுமுறை. பின் ஒவ்வொரு அத்தியாயத்தை மொழிபெயர்க்கத் தொடங்கும்போதும் அந்த அத்தியாயத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பேன். மூலநூலின் தாக்கம் மனத்தில் ஊறியிருக்கும்போது, அந்தப் படைப்பாளியிடமிருந்து கடன்பெற்ற படைப்பெழுச்சியில் என் முதல் வரைவை எழுதி முடிப்பேன்,

இரண்டாவது வரைவில் மூலப்பிரதியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு வரியையும் ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தங்கள் செய்வேன். சிக்கலான இடங்கள் என்றில்லாமல் சாதுவாகத் தோற்றமளிக்கும் வாசகங்கள்கூடச் சில நேரங்களில் மொழிப்பெயர்ப்பதில் திணற அடித்துவிடும், எத்தனை முறை அடித்துத் திருத்தி எழுதினாலும் மூலவாக்கியத்தின் spirit மொழிபெயர்ப்பில் வராது. சுவரில் தலையை முட்டிக்கொள்வதற்கு ஒப்பான அவஸ்தை அது. சில நேரங்களில் சரியாக வராத இடத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பத்திக்குச் சென்றுவிடுவேன். அதன்பின் பணிக்குச் செல்லும்போதும் சாப்பிடும் போதும் இதே ஞாபகம் ஊசலாடிக்கொண்டிருக்கும். பிறகு பாதி வேலைக்கு நடுவில் திடீரென்று விளக்கு எரியும். இவ்வளவு நேரம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாக்கியம் அல்லது சொல் அல்லது வாக்கிய அமைப்பு சட்டென்று துலக்கமாகும். உடனே அதை டைரியில் குறித்துவைத்துக் கொள்வேன். மூச்சு சீராகும்.

நான் கணினியில் தட்டச்சுசெய்வதில்லை என்பதால், கையால் எழுதித் திருத்தி மாற்றியமைத்து அனுப்பும் கைப்பிரதியைப் பதிப்பாளர் அலுவலகத்தில் தட்டச்சு செய்து அனுப்பிவைப்பார்கள். சாதாரணமாக மொழிபெயர்த்து சில மாதங்கள் கழித்தே தட்டச்சுப் பிரதி கைக்கு வருவதால், மேலும் படிக்கும்போது புதிய திருத்தங்கள் தோன்றும். பொதுவாக இந்த revision சடங்கு மூன்றுமுறையாவது எனக்கும் பதிப்பாளருக்கும் இடையே நடக்கும். மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே பரிபூரணத்துவத்தை எட்ட முடியாது என்பதை ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் அறிந்தே இருக்கிறார். உங்கள் மொழிபெயர்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்குமேயொழிய திருப்தியளிக்காது,

இந்த நாவலுக்கு விமர்சனங்கள் வந்தனவா? மொழி பெயர்ப்பாளரைத் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டு ஏதேனும் வெளியானதா?

என் பெயர் சிவப்பு நாவலைப் பொறுத்தவரை கவிஞர் சுகுமாரன் எழுதிய விமர்சனம் மட்டுமே வெளி வந்துள்ளது. ஆனந்த விகடன் வரவேற்பறைப் பகுதியில் ஸ்டாம்ப் சைஸில் ஒரு குறிப்பு வந்தது. என்னுடைய எழுத்தாள நண்பர்கள் சிலர் படித்து விட்டுத் தொலைபேசியில் பாராட்டினார்கள், எஸ். ராமகிருஷ்ணன் என் மொழிபெயர்ப்பைப் பக்கம் பக்கமாக எடுத்து அலசி வெகுநேரம் பேசினார். இந்திரனும் சிலாகித்துப் பேசினார், ஜெயமோகனைச் சந்தித்தபோது பேசினார். புத்தகத்தில் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டிருந்ததால் நான்கைந்து பேர் தொலைபேசினர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் எல்லோருமே இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருப்பதாகவும் படித்து முடித்துவிட்டு மீண்டும் பேசுவதாகவும் சொன்னார்கள் பின்பு வரவேயில்லை,

தமிழில் விமர்சனம் என்பதே காணக் கிடைப்பதில்லை. இந்த நாவலை விடுங்கள். ஜெயமோகனின் கொற்றவை மிக உன்னதமானதொரு படைப்பு, இதற்கு எனக்குத் தெரிந்து சோமசுந்தரம் எழுதிய விமரிசனம் மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் என் மொழிபெயர்ப்புகளுக்கு எதிர்வினை வருவதை விரும்புவேனே தவிர எதிர்பார்ப்பதில்லை. நான் மொழிபெயர்ப்பது எனது தேர்வு சார்ந்தது. ஒரு கதை அல்லது நாவல் என்னை வெகுவாகப் பாதித்து தமிழுக்கு அதைக் கொண்டு வந்தாக வேண்டுமென்ற துடிப்பில் செய்கிற காரியம். நிச்சயம் பலர் படிப்பார்கள் எனத் தெரியும். விமரிசனமோ பாராட்டோ வந்தாலும் வராவிட்டாலும் நான் தொடர்ந்து என் மொழிபெயர்ப்பில் உன்னதமான படைப்புகளை அறிமுகப்படுத்திக்கொண்டேதான் இருப்பேன். இது எனக்கு நானே விதித்துக்கொண்ட கடமை. ஒருவிதக் கிறுக்குத்தனமென்றுகூடச் சொல்லிக்கொள்ளலாம்.

மொழியெர்க்கும்போது உண்டாகும் சந்தேகங்களை எப்படித் தீர்த்துக்கொள்கிறீர்கள்?

Ideally, ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரியனோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்? ஐரிஷ் நாவலாசியர் ஜான் பான்வில்லின் The Sea நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. Ireland Literature Exchange என்ற அந்த நாட்டின் இலக்கிய கலாச்சாரத் துறை என்னை டப்ளினுக்கு அவர்கள் செலவில் வரவழைத்து நாவல் நடக்கும் கதைக் களனை ஒரு மாதம் சுற்றிப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு மொழிபெயர்க்க நல்கை வழங்கினார்கள். அந்த ஒரு மாதகாலமும் பான்வில்லை சந்திக்க முயன்றுகொண்டேயிருந்தேன், அவரிடம் கேட்பதற்கு ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கேள்விகள் என்னிடம் இருந்தன. கடல் நாவல் ஓர் உள்முகமான நாவல். பல நுட்பமான உணர்வுகள் சிக்கலான வாக்கிய அமைப்பில் நாவல் முழுக்க விரவியிருக்கும். பல இடங்களில் பான்வில் தன் சுயநிலை இழந்து ஆழ்மன வெளிப்பாட்டில் எழுதிச்செல்கிறாரோ எனத் தோன்றும். இவற்றைப் பற்றியெல்லாம் எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. பான்வில் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் வழங்கவேயில்லை. அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்பினேன். ஆறு மாதங்கள் கழித்து என் நண்பரும் கலைவிமரிசகருமான இந்திரன் டப்ளின் சென்றிருந்தபோது பான்வில்லை ஒரு விழாவில் சந்தித்திருக்கிறார். என்னைச் சந்திக்க மறுத்ததற்கு அவரிடம் காரணம் கேட்டபோது. ‘மொழிபெயர்ப்பாளர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் அசூயை ஏற்படுத்தும் விஷயம். அவர்களை என் அந்தரங்கத்திற்குள் பிரவேசிப்பவர்களாக உணர்கிறேன். அவர்களை நான் சந்திப்பதே இல்லை’ என்றாராம்.

திரும்பத் திரும்ப வாசித்து. என் வாசிப்பு அனுபவத்தை வைத்தேதான் என் ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.

மொழிபெயர்ப்பால் உங்களுக்குப் பணம், விருது 
ஏதாவது கிடைத்திருக்கிறதா?

காலச்சுவடு பதிப்பகம் மட்டும் ராயல்டி தருகிறது. மூன்று வருடங்களாகியும் இரண்டாவது பதிப்பு வராத புத்தகத்திற்கு எவ்வளவு ராயல்டி வந்துவிடப்போகிறது? இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிய எந்தக் கதைக்கும் பெரும்பாலும் சன்மானம் வந்ததில்லை. உங்கள் கதைக்குப் படம் போடுபவருக்குக்கூடச் சன்மானம் தருவார்கள். எழுத்தாளன் மட்டும் விஷயதானம் செய்கிறவனாகத்தான் இருக்க வேண்டும். விருது என்றால் அயர்லாந்து அரசு வழங்கிய Bursary மட்டும்தான். உள்ளூரில் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலொன்றும் வருத்தமில்லை. என்னைப் போன்ற கிறுக்குகளுக்கு வருத்தமும் ஏற்படாது.

நீங்கள் நாளை ஓரான் பாமுக்கை நேரில் சந்திக்க நேர்ந்தால்?

ABBA - The Movie என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அபா இசைக்குழுவைப் பேட்டிகாணப் படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டேயிருப்பான். கடைசியில் யதேச்சையாக ஒரு லிஃப்ட்டில் ஏறும்போது உள்ளே அபா குழுவினர் இருப்பதைப் பார்ப்பான். பேச்சே வராது அவனுக்கு. அதேபோலத்தான் என்னாலும் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது என நினைக்கிறேன். அவரது ஒவ்வொரு நாவலிலும் இடம்பெறும் எனக்குப் பிடித்தமான வரிகள் மனத்தில் ஓடுமேயொழிய வாயில் வராது, ஒருவேளை இரண்டாம்முறை சந்தித்தால். அவரிடம் இரண்டாயிரம் சந்தேகங்கள் கேட்பேன். Snow நாவலில் வரும் நெஸிப்பைப் போல.

அதிகாலை, ஜி. குப்புசாமி அலுவலகத்துக்குப் புறப்படும் நேரத்தில் அழைத்திருந்தேன். இருந்தாலும் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவும் விரிவாகவும் பதிலளித்தார். பல இடங்களில் அவருடைய அனுபவம் கோக்னருடைய அனுபவத்தை ஒத்ததாகவே இருந்தது. ஒரு வசனம் அல்லது வார்த்தை சரியாக வரவேண்டுமென்பதற்காக இருவருமே நேரங்காலம் பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள். கோக்னர் தூங்கும்போது மூளையில் வசனங்கள் ஓடும் என்று கூறியிருக்கிறார். திடீரென்று ஒரு சரியான சொற்றொடர் தோன்றும். அது போலக் குப்புசாமி பஸ்ஸில் பயணம் செய்யும்போது அவர் தேடிய வார்த்தை ஒன்று வந்துவிழும்.

மொழிபெயர்ப்புகளைப் பதிப்பகங்கள் விரும்புவதில்லை. மொழிபெயர்ப்பதற்கும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு அதனால் பெரும் பயனோ லாபமோ கிடையாது; புகழும் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுவதற்குச் சில நிறுவனங்கள் உள்ளன. National Endowment for the Arts போன்ற அமைப்புகள் மொழிபெயர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக முன் பணம் கொடுத்து உதவும். கோக்னர்கூட இப்படி யான அமைப்புகளிடம் உதவித்தொகை பெற்றவர்தான்.

தமிழ்நாட்டில் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பண உதவி செய்வதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் கொடுப்பார் இல்லை. அரசாங்கம் செய்ய வேண்டும் என்று இல்லாமல் தனியார் நிறுவனங்கள் மொழிபெயர்ப்புகளுக்கு உதவலாம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் இலக்கிய அமைப்புகளும் கவனம் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு நூலுக்குப் பரிசு வழங்கும்போது ஒரு தொகை மொழிபெயர்ப்பாளருக்குப் போகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்க இதுதான் வழி.

குப்புசாமியுடன் பேசியபோது அவர் மொழிபெயர்ப்பு என்பது மூல நூலை ஒருபோதும் தரத்தில் தாண்டாது என்பதில் உறுதியாக இருந்தார். நான் பேசிய எழுத்தாளர் டேவிட் டங்கன் தன்னுடைய நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஆங்கில நூலிலும் பார்க்கச் சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஓரான் பாமுக் பல்கலைக்கழக அரங்கில், கோக்னர் முன்னிலையில், கோக்னரின் ஆங்கில மொழிபெயர்ப்பு துருக்கி நாவலிலும் பார்க்கச் சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். குப்புசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் ஆங்கிலத்திலும் பார்க்க அழகாகவும் எளிமையாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. ஓரான் பாமுக்குக்குத் தமிழ் தெரியாது. ஆகவே அவர் தமிழில் என் பெயர் சிவப்பு நாவலைப் படிக்கும் வாய்ப்பில்லை. படித்திருந்தால் அவர் தமிழ் நாவல் துருக்கி நாவலிலும் பார்க்கச் சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்லியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

மொழிபெயர்ப்பது என்றால் அது ஒரு சாதாரண விசயம் என்று நாங்கள் நினைக்கிறோம். அது அப்படியல்ல. நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. கோக்னரின் முயற்சியால் ஓரானுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் புகழ் முழுக்க ஓரானுக்குத்தான்; பரிசுப் பணமும் அவருக்கே. எதற்காக ஒருத்தர் மெனக்கெட்டு இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்? நிச்சயமாக ஓர் அர்ப்பணிப்பு உணர்வுதான். இது மொழிபெயர்ப்பவர்களிடம் பேசும்போது தெரியும். பல சமயம் அவர்களுக்கு மொழி பெயர்ப்பைப் பாதியில் நிறுத்திவிடத் தோன்றியிருக்கிறது. தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற மெல்லிய வருத்தமும் உண்டு. மொழிபெயர்ப்பாளருக்குப் பரிசோ விருதோ கிடையாது. டேவிட் டங்கன் சொன்னதுபோலப் புகழ் முழுக்க எழுத்தாளருக்குப் போகுமே ஒழிய மொழிபெயர்ப்பாளருக்கு அல்ல.

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல் வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளர் தெரியக் கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி தெரிவதில்லை. அப்படித்தான். இதனாலோ என்னவோ நாங்கள் கண்ணாடியைப் பார்க்காமல் விடுவதுபோல மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இனிமேல் பிம்பத்தைப் பார்ப்போம். ரசிப்போம். அத்துடன் தவறாமல் கண்ணாடியையும் பார்ப்போம். ஏனென்றால் கண்ணாடிதான் மொழிபெயர்ப்பாளர்.

நன்றி ; காலச்சுவடு

No comments:

Post a Comment