காட்டின் குரல்
சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற 36-வது புத்தகக் கண்காட்சியில் நூல்களை வாங்கிவிட்டு, தோழர்கள் வே.ராமசாமி, நக்கீரனுடன் அருகில் இருந்த மரத்தடியில் நின்று மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நண்பர் நக்கீரனின் ஆச்சரிய குரலால் தூண்டப்பட்டு, நாங்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, எங்களை வைத்தகண் வாங்காமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது புள்ளி மான் ஒன்று. நேற்றுவரை கவலையற்று அது சுற்றித் திரிந்த அந்தப் பரந்த புல்வெளி, மனிதக் கூட்டத்தால் பாழ்பட, ஒரு காட்டுயிரின் வாழிடம் சீர்கெட்டுப் போனதை நேரடியாகக் காண முடிந்தது. மனிதர்கள் சாப்பிட்டு வீசியெறிந்த வீணான உணவுகளை முகர்ந்து பார்த்து, வேதனையுடன் திரும்பிச் சென்றது, வாழிடம் இழந்த அந்தப் புள்ளி மான்...!
வீடு திரும்பிய பிறகும் அந்த சோகக் காட்சி மனதைவிட்டு அகலவில்லை. அந்த ஞாபகத்துடனே பாரதிதாசன் எழுதிய 'காட்டின் குரல்' நூலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். காலை நிகழ்வை ஒட்டியே புத்தகம் அமைந்திருந்தது.
இன்றைய இந்திய நகரங்களிலும், காடுகளிலும் உள்ள பல உயிரினங்கள் ஏதோ ஒருவகையில் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றன. காடுகள் அழிவதால் புலி மற்றும் யானையின் அழிவு, மூடநம்பிக்கையால் பாம்பு, தேவாங்கு, பச்சோந்தி போன்ற சிற்றுயிர்கள் அழிவு என அழிவின் விளிம்பில் இருக்கும் பல காட்டுயிர்கள் சுட்டிக்காட்டலாம். ‘கனிமச் சுரங்கம்’ என்ற பெயரில் காடுகளும், ‘மணல் குவாரி’ என்ற பெயரில் நீர்நிலைகளும் மாயமாகி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களான நமக்கும் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகின்றன. இந்த சிக்கலில் முதல் பலியாவது ஏழை, எளிய மக்களே. இதில் காட்டுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் மொழியில் பாரதிதாசன் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது.
பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காட்டின் குரல்’. மூடநம்பிக்கைகள் அதிகம் படிந்துள்ள உயிரினங்களில் பாம்புகளுக்கு அடுத்ததாக, தேவாங்கைக் குறிப்பிடலாம்.
சு.பாரதிதாசன் |
‘பலியாகும் தேவாங்குகள்’ கட்டுரையில் அமைதியான சுபாவம் கொண்ட தேவாங்குகள் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்வைக்கிறார். காட்டுயிர் மீதான அறிவின்மையே, மூடநம்பிக்கைகளாக வெளிப்படுகின்றன. உண்மையில் தேவாங்குகள் நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன.
‘வலசைப் பறவைகளுடன் சில நாள்கள்’ கட்டுரையில், பறவைகளுக்கு வளையமிடுதலைப் பற்றிய பல அறிவியல் தகவல்களைக் கூறுவதுடன், அவரது காட்டுஉலா அனுபவத்தையும் இணைத்துள்ளது பசுமை எழுத்தில் புதிய வகையாக அமைந்துள்ளது. வெளிமானின் மற்றொரு பெயர் ‘மரைமா’ என்பதும், ‘திருமறைக்காடு’ வேதாரண்யம் எனப் பெயர் மாறியதற்கான காரணத்தையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
‘ஆமை நடை’யில் தமிழக கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்யவரும் பங்குனி ஆமைகளின் வாழ்வியல் சிக்கல்கள், ஆபத்துகள் பற்றி பேசியுள்ளார். தமிழகத்தின் வெவ்வேறு வட்டாரச் சொல் வழக்கை ஆவணப்படுத்துவதின் அவசியத்தை, ‘பஞ்சல் ஆமை’ என்பது போன்று சொற்கள் உணர்த்துகின்றன.
‘பழங்குடியினரும் பச்சோந்தியும்’, ‘பாம்பைக் கண்டால்’, ‘என்ன விலை அழகே’ ஆகிய கட்டுரைகள் காட்டுயிர்களின் அழிவைப் பற்றித்தான் பேசுகின்றன என்றாலும், அக்கட்டுரைகள் முழுமை பெறாதது போலத் தெரிகிறது. பச்சோந்தி, பாம்பு, புலிகள் குறித்தான அறிவியல் செய்திகள், அனுபவங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
காடுகள், காட்டுயிர்களின் நடத்தையியல், அவை சந்திக்கும் பாதிப்புகள், தனக்குத் தேர்ந்த அனுபவங்களை இன்னும் விரிவான வகையில் இந்த நூலில் பதிவு செய்வதற்கு, வாய்ப்பு இருந்ததாகவே தோன்றுகிறது. அதை ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இருந்தபோதும் பாரதிதாசனின் எழுத்து ஒரு புதுவகையான முயற்சி. இதற்கு எடுத்துக்காட்டாக சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பாறு (பிணந்தின்னிக் கழுகு), பஞ்சல் ஆமை (பங்குனி ஆமை) என்பது போன்று அவர் பயன்படுத்தும் நம் மரபு சார்ந்த பெயர்களைச் சுட்டலாம். இந்த நூல் இன்னும் விரிவும் ஆழமும் கூடி இருந்திருக்கலாம். அடுத்தடுத்த புத்தகங்களில் அவர் இதைச் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
நூல் அறிமுகம் ; ஏ.சண்முகானந்தம்
காட்டின் குரல் | சு. பாரதிதாசன்
பாரதி புத்தகாலயம் & அருளகம்
பக்.64 | ரூ. 40.00
No comments:
Post a Comment