Tamil books

Thursday 21 April 2011

நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை

 பா. தேவேந்திர பூபதி

பழமையும் இலக்கிய, இலக்கணச் சிறப்புமுடைய தமிழ்மொழி முச்சங்கங்களைக் கண்டது. முதல் சங்கத்தில் அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர் போன்ற புலவர்களை-யும் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்ற நூல்களையும் கடைச்சங்கத்-தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார் போன்ற புலவர்கள் நெடுந்-தொகை நானூறு, ஐங்குறுநூறு நூல்களை இயற்றியிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுச் சான்றுக-ளாலும் அறிய முடிகிறது. பண்டைக் காலந்-தொட்டே தமிழர-சர்கள் தமிழை வளர்த்தனர் என்பதை சங்கப்-பாடல்கள் மூலம் அறியலாம். பின் தமிழ்-நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் பிற நாட்டவரின் மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்படலாயின. இக்காலத்தில் தமிழை ஆதரிக்கும் அரசர்களும் குறைந்ததினால் தமிழ்மொழியின் வளர்ச்சி சற்று தடைபடத் தொடங்குகையில் சேதுபதி மன்னர்களின் தமிழ்ப்பற்று அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இந்த வேந்தர்களது தமிழ்ப்பற்றின் அடையாளமென நான்காம் மதுரைத் தமிழ்ச்சங்கம் விளங்குகிறது.
ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் சில காலம் தங்க வேண்டி இருந்தது. அவரது வருகையின் அருமையறிந்த மதுரை அறிஞர்கள் பலர் அவரது பிரசங்கத்தைக் கேட்க ஆவலாயிருந்தனர். அவர்களது விருப்பத்தை-யறிந்த தேவரவர்கள் உபந்யாசங்கள் நடத்த நேர்ந்தபோது கம்பராமாயணம், திருக்குறள் நூல் பிரதிகள் அவருக்கு வேண்டியிருந்தன. சொல்லி அனுப்பிய நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் நேரத்திற்குக் கிடைக்கவில்லை. இந்த நிலைமை அறிந்ததும், ‘தமிழ் நிலை பெற்ற... மதுரை, கூடலினாய்ந்த ஒண் தீந்தமிழ்’ என்று முன்னோர் சிறப்பித்ததும் செந்தமிழின் பிறப்பகமான மதுரையிலே ‘தமிழுக்கு கதி’ என்ற கம்ப ராமாயணமும் திருக்குறளும் கிடைப்பது அருமையாகிவிட்டதே’ என்று அவர் வருந்தி-னார். இந்தச் சூழ்நிலையே மதுரையில் தமிழ்ச்சங்கம் தோன்றக் காரணமாக அமைந்தது.
மதுரை மாநகரில், சென்னை மாநில மாநாடு 1901-ஆம் வருடம் மே மாதம் 21, 22, 23, தேதி-களில் நடைபெற்றது. மாநாட்டுக்குப் பாண்டித்-துரைத் தேவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். அந்த மாநாட்டில், தமிழின் சிறப்புகளை எடுத்துக்கூறி, தற்போது தமிழ் வளர்ச்சி தடைபட்டிருப்பது குறித்தும் உள்ள நிலையினை விளக்கி, சங்கம் நிறுவ தாம் கருதியிருக்கும் எண்ணத்தை வெளியிட்டார். மாநாடு நிறைவடைந்த மறுநாள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நடக்கவிருக்கும் தமிழ்ச்சங்கப் பேரவைக்கு மாநாட்டு உறுப்பினர்-களும் மக்களும் ஆதரவு தரக் கோரினார். அதன்படி அனைவரும் வந்திருந்து சிறப்பித்தனர். பேரவையில் கூடியிருந்தவர்களுக்குத் தன் எண்ணத்தைத் தெளிவாகக் கூறி செய்ய வேண்டிய கடமையையும் விளக்கினார். அங்கிருந்த அனைவரும் தங்களால் இயன்ற அளவு உதவி புரிவதாகக் கூறினர். இவ்வாறு ‘பாண்டிய மன்னர்களுக்குப் பின் தமிழை வளர்க்க முடிவேந்தர் ஒருவரும் இல்லையே’ என்று புலவர்கள் வாடிய பொழுது சேதுபதி மன்னர்கள் இக்குறையைப் போக்க முயன்றனர்.
1901ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேதுபதி உயர்நிலைப்-பள்ளியில் தமிழ்ச்சங்கம் நிறுவப் பெற்றது. சங்கத் திறப்புவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அறிஞர்களும், புலவர்களும் சிறப்புரைகள் ஆற்றினர். தமிழ்ச்சங்கம் தொடங்கப் பெற்றதற்-கான காரணம், தம் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவல்ல. ஒருமுறை அவருக்கு மதுரையில் சொற்பொழிவுக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்காமல், தமிழ் வளர்த்த மதுரையில் தமிழின் நிலைகண்டு அதை காப்பாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டதாகும். தமிழ்ச்சங்கத்தில் ‘நூலாராய்ச்சி சாலை’ என்ற பிரிவிலிருந்த வித்வான்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டனர்.
பாண்டித்துரைத் தேவர் 1867ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் பிறந்தார். இளமை முதலே அறிஞர்களிடம் இலக்கியம், இலக்கணம் கற்றுப் புலமை பெற்று விளங்கியதோடு சைவ சித்தாந்தத்திலும் புலமை பெற்றிருந்தார். முச்சங்கங்களை நிறுவி தமிழ் வளர்த்த பாண்டியர்கள் போல, நான்காம் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த பெருமைக்கு உரியவராவார். இவர் புலவர்களை மதிப்பதிலும் உதவும் மனப்பான்மையிலும் தம் முன்னோர்களைப் போலவே திகழ்ந்தார். நாராயண அய்யங்கார் என்பவர், சங்க கலாசாலையின் தலைமை-யாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரிய-ராகவும் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். தமக்குப் பின்னர் தமிழ்ச்சங்கத்தைச் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பெற்ற-வருள் அவரும் ஒருவர்.
‘திரு நாராயணர் மேல் தேவர் கொண்ட பற்று மிகப் பெரியது. அவர் புலமைத்திறத்தை மதித்த பான்மை அதனினும் பெரிது. ஒருநாள் வெயிலில் நடந்துவந்த களைப்பால் தம் கட்டிலிலே நாராயணர் அயர்ந்து உறங்கினராக. அவரை எழுப்புவதற்காகச் சென்ற ஏவலனைத் தடுத்து கட்டிலின் பக்கம் ஒரு நாற்காலியிட்டு அமர்ந்து தாமே விசிறி கொண்டு விசிறி ‘கவரி வீசிய இரண்டாம் காவலராக’ விளங்கியவர் பாண்டித்துரை’ (இரா. இளங்குமரன் 1987 பக்.72) என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டித்துரைத் தேவர் பல நூல்களிலிருந்து சிறந்த கருத்துகள் அடங்கிய பாடல்களைத் தொகுத்து ‘பன்னூற்றிரட்டு’ என்று பெயரிட்டு ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழ்ச்சங்கத்தின் 5வது வெளியீடாகவும், ‘சைவ மஞ்சரி’ என்ற நூலைத் தொகுத்து சங்கத்து 2வது வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். சிவஞான சுவாமிகள் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், முருகன் மீது காவடிச்சிந்து, சில தனிப்பாடல்களும் பாடியுள்ளார். உ. வே. சாமிநாதையர் வெளி-யிட்ட மணிமேகலை, புறப்பொருள் வெண்பா-மாலை முதலியன பாண்டித்துரைத்தேவர் செய்த பொருளுதவியால் வெளிவந்தனவாகும்.
தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியிடப்பட்ட நூல்கள் 17; அவை முறையே வெளியீட்டு எண் வரிசைப்படி.
1. ஞானாமிர்த மூலமும் உரையும்
2. சைவமஞ்சரி 3. யாப்பணியிலக்கணங்கள் (விசாக பெருமாளை-யர், பஞ்சலஷ்ண வினா விடையினின்று எடுத்தவை) 4. வைத்திய சாரசங்-கிரகம் 5. பன்னூற்றிரட்டு 6. மகாபாரதம் அரும்பதவுரையுடன் (வில்லிப்புத்தூராழ்வார் இயற்றியது) 7. தோத்திரத் திரட்டு 8. தமிழ்ச் சொல்லகராதி உயிர் வருக்கம் முடிய (1, 2, 3 பாகங்கள்) 9.  அபிதான சிந்தாமணி 10. தொல் காப்பிய செய்யுளியல்_நச்சினார்க்கினியருரை (உரையாசிரியருரையுடன்) 11. திருவருணைக் கலம்பகம் 12. அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ் 13. கலைசை சிலேடை வெண்பா 14. தொல்-காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி 15. திருவாரூர் நான்மணிமாலை 16. மதுரை நான்காம் தமிழ்ச்-சங்க வரலாறு 17. திருவாரூர் நான்மணிமாலை.
மிமி
மனிதன், என்று மொழியை உண்டாக்கி-னானோ அப்போதே அதற்கு வரிவடிவம் தரத் தொடங்கிவிட்டான். காலத்திற்கேற்றவாறு எழுதுபொருட்களின் மாற்றமும் ஏற்படத் தொடங்கலாயின. சுட்ட செங்கற்கள், மரப்பலகைகள், தோல்கள், மரப்பட்டைகள், பனையோலைகள், உலோகத் தகடுகள் என எழுத்துக்கள் கூரிய கற்கள், ஆணிகள் கொண்டு எழுதப்பட்டன. ஏடுகளில் எழுத அதிக நேரமும் உழைப்பும் செலவழிப்பதோடு சிக்கலான வேலையாகவுமிருந்தது. ஏடெழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் கூலிக்கு ஏடெழு-தினர். ஒரு நூலைக் கூலி கொடுத்து எழுதுவது செலவு அதிகம் பிடிப்பதனால் இது செல்வந்தர்-களுக்கு உரியதாகவுமிருந்தது. நூலை வைத்திருப்-பவர்களிடம் வாங்கிப் பிரதி எடுக்கும் பழக்கமும் இருந்தது. கூலிக்கு எழுதும்போதும் பிரதி செய்யும்போதும் தவறுகள் நேர்ந்தால் ஏட்டில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும், சுவடிகளைப் பாதுகாப்பது மிகக் கவன-மாகவும் அதேசமயம் கடினமாகவும் இருந்-துள்ளது. அச்சுச் சாதனங்கள் தோன்றியப்பின் புத்தகம் கிடைப்பதிலுள்ள சிரமங்கள் குறைந்-துள்ளன. சுவடிகள் நூலாக, ஒரு சில பிரதிகளே இருந்தமையால் யாரிடமும் புத்தகம் வாங்குவது கடினமான காரியமாகவே இருந்து வந்துள்ளது. அதிகப்படிகளுக்குச் செலவு அதிகம் பிடித்தது.
‘பெர்சிவல் ஐயர் 1835ஆம் ஆண்டுக்கு முன்னர் சதுரகராதி ஓலைப்பிரதியைப் பத்து பவுன் (நூற்றைம்பது ரூபாய்) விலை கொடுத்து வாங்கியதாகவும், அந்த அகராதி அச்சிற் பதிக்கப்பட்டப் பிறகு பிரதியை 2லு ஷில்லாங் (1 ரூபா 14 அணா) விலை கொடுத்து வாங்கிய-தாகவும் மர்டாக் என்பவர் எழுதியுள்ளார். இதிலிருந்து அச்சுப் புத்தகத்துக்கும் ஏட்டுச்-சுவடிக்கும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு-களைத் தெரிந்து கொள்ளலாம்’ (மயிலை சீனி. வேங்கடசாமி 1962 பக். 113, 114)
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அ.முத்துசாமிப்-பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், தாண்டவராய முதலியார், மழைவை மகாலிங்கையர் போன்றோர் பதிப்புக்கலையில் முக்கியப் பங்கு ஆற்றியவர்களாகக் கொள்ள-லாம்.
தமிழ்நாட்டில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் 16ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்கள் முதன்முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தன. 1835-க்குப் பின்னர் உள்நாட்டவர் அச்சு இயந்திரங்களை வைத்துக்கொள்ளும் உரிமை-யைப் பெற்றபின் சுவடி வடிவிலிருந்த இலக்கி-யங்கள் புத்தகங்களாக வெளிவரத் துவங்கின.
நிறுவனமயப்பட்ட பதிப்புப்பணிகள் முழுமையாகத் தொடர முடியாத நிலையில் நான்காம் மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றி, தமிழிலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடு-வதை நோக்கமாகக் கொண்டது.
தமிழ்ச்சங்கப் பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணி தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சங்கப் பதிப்பாசிரியர்களுள் ரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், உ.வே.சாமிநாதையர், சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர், ச.வையாபுரிப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாயிருந்தனர். தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நூலாராய்ச்சி சாலையும் உருவாக்கப்பட்டு, அங்கிருந்த வித்வான்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டனர். இதனால், பலரிடமிருந்து  சுவடிகள் ஆடிப்-பெருக்கிலும், போகியிலும் அழியக் காத்திருந்த நிலையில் காப்பாற்றப்பட்டு இலக்கியங்களாக வெளிவந்தன. இதனை வெளியிடும் களமாக ‘செந்தமிழ்’ இதழ் அமைந்தது. மதுரை தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகவும், ‘செந்தமிழ்’ இதழின் வெளியீடாகவும் பல நூல்கள் பதிப்பிக்கப்-பட்டன. இந்நூல்களை வேறுபடுத்திக்காட்ட தமிழ்ச்சங்க பிரசுரம், செந்தமிழ் பிரசுரம் என்று முகப்பில் குறிப்பிட்டிருந்தது. பதிப்பு வரலாற்றில் தமிழ்ச்சங்கப் பதிப்பானது, பதிப்பு நிறுவனங்-களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.
மு. இராகவையங்கார்
1879ஆம் ஆண்டு பாண்டிநாட்டு அரியக்குடி-யில் பிறந்தார். தமது 16வது வயதில் தந்தையை இழந்தபின் பாண்டித்துரைத் தேவரின் ஆதரவில் தமிழ் பயின்று, 1901இல் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியதும் முதலில் சேதுபதி செந்தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1902இல் தொடங்கப்பட்ட ‘செந்தமிழ்’ இதழின் துணை ஆசிரியரானார். இதழின் ஆசிரியராக இருந்தவர் இரா. இராகவையங்கார். இவருக்குப் பின் மு.இராகவையங்கார் இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கி ‘செந்-தமிழ்’ இதழில் பல கட்டுரைகளை வெளியிட்-டார். அவ்வாறு வெளியிட்ட ஆராய்ச்சி உரைகளுள் ஒன்று ‘வேளிர் வரலாறு’ ஆகும். இது கொழும்பு வி.ஜே. தம்பிப்பிள்ளை என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்-பட்டு ‘ராயல் ஏஸியாட்டிக் சொசைட்டி’ என்ற இதழில் வெளிவந்தது. சென்னைப் பல்கலைக்-கழக இண்டர்மீடியட் வகுப்பில் இது இருமுறை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இவரது பலதரப்பட்ட பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் மூலம் ‘ராவ் சாஹிப்’ என்ற கௌரவ டாக்டர் பட்டத்தினை 1939ஆம் ஆண்டு வழங்கச் செய்தது. இவர் பல நூல்களை ஏட்டுச்சுவடியி-லிருந்தும் தாமே நூல்களை இயற்றிப் பதிப்பித்தும் சிறந்த பதிப்புப்பணி செய்தவர்.
இரா.இராகவையங்கார்
1870ஆம் ஆண்டு சிவகங்கைக்கு அருகிலுள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் பிறந்தார். தன் மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் தமிழ் கற்றார். படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டுத் தமிழை ஆதரிக்கும் வள்ளல்-களால் ஆதரிக்கப் பெற்று மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்-தினைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் 1902இல் தொடங்கிய ‘செந்தமிழ்’ இதழின் முதல் ஆசிரியராக இவரை நியமித்தார். அண்ணா-மலைப் பல்கலைக்கழகத்தில் 1935இல் தமிழாராய்ச்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது சொற்பொழிவைக் கேட்டவர்களுள் இராஜாஜி, டி.கே.சி., சத்தியமூர்த்தி, அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். உ.வே. சாமிநாதை-யரால் ‘மகா வித்துவான்’ பட்டம் அளிக்கப்-பட்டது. இவர் ‘செந்தமிழ்’ இதழ் வாயிலாகவும், தமிழ்ச்சங்கத்தின் வாயிலாகவும் ஏராளமான நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
உ.வே. சாமிநாதையர்
ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் இலக்கியங்-களைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்தவர். பதிப்பு நெறிமுறைகளில் ஒரு முன்னோடியாகத்  திகழ்ந்தவர். இவர் பல நூல்களைப் பதிப்பிக்காமல் இருந்திருந்தால் நாம் எத்தனையோ இலக்கியச் செல்வங்களை இழந்திருக்க வேண்டியிருக்கும். தமது காலத்தில் ஆராய்ச்சித் திறத்திலும் பதிப்புத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவராவார். வையாபுரிப்பிள்ளை தனது ‘தமிழ்ச் சுடர் மணிகள்’ என்ற நூலில் உ.வே.சா.வை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். 1880இல் கும்பகோணம் கல்லூரியில் இவர் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 61 ஆகும். செந்தமிழ் இதழில் கட்டுரைகள் பலவற்றினையும் எழுதியிருக்கிறார். சில நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர்
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றியபோது மகிழ்ச்சியுடன் பணி செய்ய முன்வந்த புலவர்களான அரசஞ்சண்முகனார், பரிதிமாற் கலைஞர், சே.ரா.கந்தசாமிக் கவிராயர் போன்றவர்களுள் இவரும் ஒருவர். இவர் தமிழ்ச்சங்கத்தின் நூலாராய்ச்சிப் பிரிவில் பணியாற்றியபோது பல சிற்றூர்களுக்குச் சென்று சுவடிகளைக் கண்டுபிடித்துத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாகவும் ‘செந்தமிழ்’ இதழின் மூலமாகவும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
சோமசுந்தர தேசிகர்
திருவாரூர் சாமிநாத தேசிகர் பரம்பரையில் தோன்றியவர். இவர் தமிழிலும், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் வானவியலிலும் புலமை பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி ஆசிரியர் குழுவில் உறுப்பின-ராக இருந்தவர். தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியான ‘செந்தமிழ்’ இதழில் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
சோமசுந்தர பாரதியார்
இவர் எட்டயபுரத்தில் பிறந்தார். சுப்பிர-மணிய பாரதியாரின் இளமைக்கால நண்பர். மறைமலையடிகளின் மாணவர். சிறந்த தமிழறி-ஞராகவும், பெரும் புலவராகவும் விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி-யவர். இவர் ‘செந்தமிழ்’ இதழில் பல நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார்.
நாராயண அய்யங்கார்
இவர் திருவில்லிப்புத்தூருக்கு அருகிலுள்ள எதிர்க்கோட்டையில் பிறந்தார். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று பாண்டித்துரைத் தேவர் அவையில் புலவராக இருந்தார். சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் தலைமையாசிரிய-ராக நியமிக்கப்பட்டார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியராகவும் சங்கத்தின் மேலாளராகவும் நூற்பதிப்பு முதலான பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.
ச. வையாபுரிப்பிள்ளை
திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையி-லுள்ள நரசையன் கிராமத்தில் பிறந்தார். இவர் பி.ஏ. வகுப்பில் மாநிலத்திலேயே முதல்வராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றவர். இவருக்கு மறைமலையடிகள் தந்த பேராதரவு இலக்கிய முயற்சிகளுக்குப் புதிய ஆக்கத்தை அளித்தது. பல நூல்களைப் பதிப்பித்த இவர், ‘செந்தமிழ்’ இதழில் பதிப்பித்து வெளிட்ட ‘இராஜராஜ தேருலா’ சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் அரசு புரிந்து வந்த ஒரு சோழர் பெருமானைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றமைந்த புராதன நூல். தென்னிந்திய சரித்திர ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது. 

No comments:

Post a Comment